Last Updated:
உத்தரபிரதேசத்தில், திருடர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்து, நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டு, நிதானமாக தூங்கி மறுநாள் தப்பிச் சென்றனர். போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் வீடு புகுந்து கொள்ளையடிக்க வந்த கும்பல், வீட்டக்குள் நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டு விட்டு நிதானமாக படுத்து உறங்கி மறுநாள் பொறுமையாக தப்பிச் சென்ற சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
வீடு புகுந்து கொள்ளையடித்தோமா? தப்பி ஓடினோமா? என இல்லாமல் தற்போதெல்லாம் திருடர்கள் திருடப்போன இடத்தில் தூங்கி எழுந்து குளித்து உடை மாற்றிக் கொண்டு நிதானமாக நடந்து செல்லும் புதுவிதமான ட்ரெண்ட் செட்டை உருவாக்கி வருகிறார்கள். எவ்வித பதற்றமோ, பயமோ, இல்லாமல் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு செல்வது போல், திருடச் செல்லும் இவர்கள் கொடுக்கும் அலப்பறை போலீசாரையே சற்று கொதிப்படையத் தான் செய்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பாபுல் சிங். இவர் தனது சிகிச்சைக்காக குடும்பத்தோடு டெல்லிக்கு சென்று இருந்தார். இதை நோட்டம் விட்ட திருட்டுக்கும்பல் ஒன்று ஜென் நிலையில், லக்னோவில் உள்ள அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அடிக்கிற வெயிலுக்கு வேர்க்க விறுவிறுக்க வீடு புகுந்து கொள்ளையடிக்க முடியாது என்ற மனநிலையில் இருந்த அந்த திருட்டுக்கும்பல் வீட்டுக்குள் நுழைந்ததும் ஏசியை போட்டு விட்டு ஆர அமர உட்கார்ந்து ரிலாக்ஸ் ஆகியுள்ளனர்.
உள்ளமும், உடலும் குளிர்ந்த பின், வீட்டுக்குள் இன்ச் பை இன்சாக தேடுதல்வேட்டையைத் தொடங்கினர். கையில் கிடைத்ததை மூட்டை கட்டிய அந்த கும்பலின் கண்களில், அங்கிருந்த நூடுல்ஸ் பாக்கெட் பட்டுள்ளது. உடனே சமையல் வேலையைத் தொடங்கிய அந்த கும்பல் சுடச் சுட மேகி நூடுல்ஸ் சாப்பிட்டு விட்டு அயர்ந்து தூங்கியுள்ளனர். காலை எழுந்ததும் பிரெஷ்ஷாக குளித்து முடித்து விட்டு கட்டிய மூட்டைகளை எடுத்துக் கொண்டு பொறுமையாக சென்றுள்ளனர்.
மறுநாள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது குறித்து பக்கத்து வீட்டுக்காரர் வங்கி அதிகாரி பாபுல் சிங்கிற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்படி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வீடு முழுக்க சிதறிக் கிடந்த உடைகளையும், காலி நூல்ஸ் பாக்கெட்டுகளையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கொள்ளைக் கும்பல் மேகி தயாரித்த பாத்திரம் அப்படியே அடுப்பில் இருந்தது. சாப்பிட்ட தட்டைக் கூட அவர்கள் கழுவாமல் போட்டுச் சென்றிருந்தனர்.
இதுகுறித்து போலீசார் பாபுல் சிங்கிடம் பேசியபோது தங்க ஆபரங்ணகள் எல்லாம் தன்னிடம் பத்திரமாக இருப்பதாகக் கூறியிருக்கிறார். இதையடுத்து வழக்கு பதிந்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
June 18, 2025 9:00 PM IST
“அப்பறம் எனக்கு பசிக்கும்ல..” திருடச் சென்ற வீட்டில் ஏசி போட்டு நூடுல்ஸை ஹாயாக ருசித்த திருடர்கள்!


