அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தம் தற்போதே முறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஈரானின் 10 அம்ச முன்மொழிவுகளில் உள்ள மூன்று முக்கிய விதிகளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பு மிகத் தெளிவாக மீறியுள்ளதாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், இத்தகைய சூழலில் இருதரப்பு போர்நிறுத்தம் அல்லது பேச்சுவார்த்தை என்பது “அறிவுக்குப் பொருந்தாத ஒன்று” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
மூன்று முக்கியக் குற்றச்சாட்டுகள்
காலிபாஃப் முன்வைத்துள்ள மூன்று முக்கியக் குற்றச்சாட்டுகள் வருமாறு:முதலாவதாக, லெபனானில் போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பது ஈரானின் முன்மொழிவில் ஒரு அங்கமாகும். ஆனால், வெள்ளை மாளிகை இதனை இன்று நிராகரித்துள்ளதோடு, லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
Image Credit: Britannica
இரண்டாவதாக, ஈரானின் தெற்குப் பகுதியான ஃபார்ஸ் மாகாணத்திற்குள் அத்துமீறி ட்ரோன் ஒன்று நுழைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், இச்சம்பவம் குறித்து தங்களுக்குத் தெரியாது என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.
மூன்றாவதாக, யுரேனியம் செறிவூட்டும் ஈரானின் உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் மீறப்பட்டுள்ளது.
இதனை ஈரான் அரசுத் தொலைக்காட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானின் 10 அம்சத் திட்டம்
கடந்த பெப்ரவரி 28-ஆம் திகதி தொடங்கிய இந்த மோதலில், ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் மற்றும் இராணுவ நிலைகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தின.
இந்தச் சூழலில், ஈரானின் 10 அம்சத் திட்டத்தைச் சுற்றியே தற்போதைய போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நகர்ந்து வருகின்றன.

இதற்கிடையில், ஈரானின் எதிர்காலத் தலைவராக அல்லது ஒரு முக்கிய அரசியல் கூட்டாளியாக காலிபாஃப்பை ட்ரம்ப் நிர்வாகம் கருதுவதாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், தற்போதைய அவரது காட்டமான கருத்துக்கள், இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
