
Last Updated:
ISRO Chairman : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோ தலைவர் சோம்நாத் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக நாராயணனை மத்திய அரசின் நியமனக் குழு தேர்வு செய்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன், திருவனந்தபுரத்தின் வலியமலாவில் உள்ள எல்.பி.எஸ்.சி.யின் இயக்குநராக பணியாற்றியுள்ளார். வரும் 14ஆம் தேதி இஸ்ரோவின் தலைவராக நாராயணன் பொறுப்பேற்க உள்ளார். தொடர்ந்து 2 ஆண்டுகள் இஸ்ரோ தலைவராக அவர் பதவியில் தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
யார் இவர்?
இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணன் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1984ஆம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்த வி.நாராயணன், கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் அங்கம் வகித்துள்ளார். தற்போது திருவனந்தபுரம் அடுத்த வலியமாலாவில் இயங்கி வரும் திரவ உந்துவியல் மையத்தின் இயக்குநராக கடந்த 6 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார்.
மேலும், இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி57, சூரியன் ஆய்வுக்கான ஆதித்யா எல்1 திட்டம், ஜிஎஸ்எல்வி எம்.கே 3, சந்திரயான் 2 மற்றும் 3 உள்ளிட்ட திட்டங்களில் முக்கிய பங்காற்றி உள்ளார். நாராயணன் தலைமையிலான எல்.பி.எஸ்.சி குழு, இஸ்ரோவின் பல்வேறு திட்டங்களுக்கு 183 திரவ உந்துவிசை திட்டம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை வழங்கி உள்ளது.
ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசை அமைப்புகளில் நிபுணத்துவம் பெற்றவராக வி. நாராயணன் அறியப்படுகிறார். விண்வெளித் துறையில் நாராயணின் பணியைப் பாராட்டி, இஸ்ரோவின் உயரிய பொறுப்பான “Distinguished Scientist” பொறுப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஐஐடி கரக்பூர் வெள்ளிப் பதக்கமும், இந்திய விண்வெளி மையம் தங்கப் பதக்கமும் வழங்கியுள்ளது. தற்போதைய இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு முன்னதாக பதவி வகித்த, சிவனும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
January 08, 2025 6:35 AM IST

