எல்லோரையும் போலவே படித்து முடித்தவுடன் ஏதோவொரு அலுவலகத்தில் ஊழியராக சென்று கொண்டிருந்த பிக்ரம்ஜித் சிங், விவசாயம் போன்ற பாரம்பரிய துறைகளில்கூட அர்ப்பணிப்பு மற்றும் புத்திசாலித்தனமான திட்டமிடல் இருந்தால் கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என்பதை இவரது ரூ.100 கோடி மதிப்பிலான வணிகம் உணர்த்துகிறது. பிக்ரம்ஜித் ஒரு விவசாயியாக தனது வாழ்க்கையைத் தொடங்கவில்லை. 2005ஆம் ஆண்டு கல்லூரி முடிந்து பட்டம் பெற்ற பிறகு, காப்பீட்டுத் துறையில் பணியாற்றத் தொடங்கினார். அதே நேரத்தில் ஒரு சிறிய பண்ணையையும் கவனித்துக் கொண்டார்.
பின்னர், 2010ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற பிக்ரம்ஜித் சிங், சிறிது காலம் வங்கித் துறையில் பணியாற்றினார். ஆனால் 2014ஆம் ஆண்டில், தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு விவசாயத்தில் முழுமையாக கவனம் செலுத்த முடிவு செய்தார். அவரது ஆரம்ப விவசாய முயற்சிகளாக இருந்த மாதுளை சாகுபடி வெற்றிபெறவில்லை. எனவே, எலுமிச்சை சாகுபடிக்கு மாறினார். இதில் அவருக்கு நல்ல லாபம் கிடைத்தது.
தனது விவசாய நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக, 200 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தார் பிக்ரம்ஜித். இதில், 100 ஏக்கரில் பழத்தோட்டங்களை அமைத்தார். மீதமுள்ள இடங்களில் கோதுமை, பாஸ்மதி அரிசி, மக்காச்சோளம், கரும்பு மற்றும் பலவகை காய்கறிகள் போன்ற பயிர்களை பயிரிடப் பயன்படுத்தினார். அதுமட்டுமின்றி ஒப்பந்த முறை விவசாயத்தையும் அறிமுகப்படுத்தினார். இது அதிக விவசாயிகளுடன் அவரை இணைய வைத்ததோடு, தொழிலையும் வளர்க்க உதவியது.
இயற்கை வேளாண்மையில் மிகுந்த நம்பிக்கை கொண்ட பிக்ரம்ஜித், ‘ஹெல்தி எர்த்’ என்ற பெயரில் சொந்தமாக பிராண்டைத் தொடங்கினார். இந்த பிராண்டின் கீழ், 216-க்கும் மேற்பட்ட இயற்கைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இதோடு நிற்காமல் இயற்கை உணவு பரிமாறும் உணவகங்களையும் திறந்துள்ளார். இங்கு பரிமாறப்படும் முக்கிய உணவுகளில் ஒன்று அதிக சத்துமிக்க ராகி. இவரது நோக்கம் வணிக வளர்ச்சி மட்டுமல்ல, இங்குள்ள இளைஞர்கள் தனது உறவினர்களைப் போல வெளிநாடுகளுக்குச் செல்வதற்குப் பதிலாக பஞ்சாபிலேயே தங்கி, தங்கள் எதிர்காலத்தை உருவாக்க ஊக்குவிப்பதும் ஆகும்.
இன்று 8,000 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை விவசாயம் செய்துவரும் பிக்ரம்ஜித், சுமார் 600 விவசாயிகளுடன் பணியாற்றுகிறார். குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) விட அதிக விலையை அவர் விவசாயிகளுக்கு வழங்குகிறார். இதனால் அவர்கள் சிறந்த வருமானம் ஈட்டவும், கண்ணியத்துடன் வாழவும் உதவுகிறார்.
நவீன தொழில்நுட்பம், புத்திசாலித்தனமான விவசாய முறைகள் மற்றும் உள்ளூர் சமூகங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதன் மூலம், பிக்ரம்ஜித் சிங் வெற்றிகரமான வணிகத்தை உருவாக்கியுள்ளார். அதே நேரத்தில் விவசாய சமூகத்தில் உள்ள பலரின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளார். விவசாயம் ஆர்வத்துடனும், புதுமையுடனும் செய்யப்படும்போது, அது பெரும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை இவரது பயணம் நிரூபிக்கிறது.
June 23, 2025 4:44 PM IST

