சிலாங்கூர் பூச்சோங் கின்றாராவில் அமைந்திருக்கும் சக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ இன்று வருகையளித்தார்.
சிலாங்கூர் மாநிலத்துக்கும், கூட்டரசு பிரதேசத்துக்குமான எல்லையில் அமைந்திருக்கும் இந்தக் கோவில் பழமையானது. கோவிலுக்குப் பக்கத்திலுள்ள அடுக்கக மேம்பாட்டுப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால், அதனையொட்டிய சாலையை மேம்படுத்தவும், இதர திட்டங்களுக்காவும் குறிப்பிட்ட வீடு கட்டுமான நிறுவனம் ஆலயத்தை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி வருகிறது.
நெடுங்காலமாக இந்தக் கோவில் எதிர்நோக்கும் சிக்கலுக்குத் தீர்வு காணும் முயற்சியை தாம் மேற்கொண்டுவிட்டதாக அவர் தமதறிக்கையில் தெரிவித்தார்.
நேற்று இலக்கவியல் அமைச்சர், சம்பந்தப்பட்ட முக்கிய தரப்புகளுடன் சந்திப்பு நடத்தினார். கோவில் நிர்வாகத்தினர், மலேசிய இந்து சங்கத் தலைவர், என இந்தக் கோவிலில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களிடம் அமைச்சர் கலந்துரையாடி உண்மை நிலவரத்தைக் கேட்டறிந்தார். அதோடு, சம்பந்தப்பட்ட சுற்றுவட்டார நிலத்தையும் பார்வையிட்ட அமைச்சர், இந்த கோவிலுக்கு நல்லதொரு தீர்வு அமைய அனைவரினது ஒத்துழைப்பும் அவசியம் என்றார்.
ஆலயம் மலேசிய இந்தியர்களின் அடையாளம் என்பதை தாம் உணர்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். ஆக சுமூகமான தீர்வு காண தாம் மாண்புமிகு தெரெசா கோக்கிடமும், மாண்புமிகு பிரபாகரனிடமும் முன்னரே, இது குறித்து பேசியிருப்பதாகத் தெரிவித்தார். இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரெசா கோக் மற்றும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிராபகரன் ஆகியோர் ஏற்கனவே முயற்சிகள் மேற்கொண்டதையும் அமைச்சர் தமதறிக்கையில் பதிவு செய்தார்.
இந்தக் கோயில் எதிர்நோக்கும் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண தாம், கூட்டரசு பிரதேச அமைச்சர் சலிஹா முஸ்தப்பாவிடமும், டி.பி.கெ.எல்.-இடம் பேசவிருப்பதாகத் தெரிவித்தார். அதோடு சிலாங்கூர் மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் ங் செ ஆன், பாப்பாராய்டு ஆகியோரிடமும் தாம் கலந்துரையாடி இந்தச் சிக்கலுக்கு நல்லதொரு தீர்வு காணவிருப்பதாக அமைச்சர் கோபிந் சிங் உறுதியளித்தார்.



