குஜராத் மாநிலம் அகமதாபாதில் நேரிட்ட விமான விபத்தில் பலியான அனைத்து உடல்களையும் அடையாளம் காண்பது என்பது இயலாது என தடய அறிவியல் துறை பேராசிரியர் டாக்டர் நரேஷ் குமார் சோனி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வியாழக்கிழமை பகல் 2 மணியளவில் நேரிட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்கள் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் உடல்கள் மற்றும் அடையாளம் காணும் பணி குறித்து தடய அறிவியல் துறை பேராசிரியர் டாக்டர் நரேஷ் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கை பல்வேறு தகவல்களை தெரிவிக்கும் வகையில் உள்ளது.
அதாவது, மிகக் கொடூரமான விபத்தாக இது அமைந்துவிட்டது. விபத்தில் பலியானவர்களின் உடல்கள் கருகியிருக்கும் நிலையைப் பார்த்தால், அனைத்து உடல்களையும் அடையாளம் காண்பது என்பது மிகவும் சிக்கலானது. உடல்கூறாய்வு அறைக்கு அனைத்து உடல்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. டிஎன்ஏ சோதனைக்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. தற்போது உறவினர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரி திரட்டப்பட்டு வருகிறது.
நாள்கள் செல்ல செல்ல வெப்பநிலை அதிகரித்து உடல்கள் கெட்டுப்போகும் அபாயமும் உள்ளது. அதனால், எவ்வளவு விரைவாக டிஎன்ஏ சோதனை செய்ய முடியுமோ அவ்வளவு வேகமாக செய்து முடிக்க தடய அறிவியல் துறையினர் பணியாற்றி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

