Last Updated:
Diwali sweets| “தீபாவளி ஸ்பெஷல்” இனிப்பு – காரம் எல்லாமே ஒரே இடத்தில்.. முழு விவரம் பின்வரும் செய்தியில் காணலாம்.
தீபாவளிக்கு ஸ்பெஷலாக இனிப்பு காரம் என அனைத்தும் ஒரே இடத்தில் வீட்டு முறைப்படி செய்து வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்து வரும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இல்லத்தரசி குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தீபாவளி வர இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அனைத்து பகுதிகளிலும் உள்ள இனிப்புக்கடைகள், பேக்கரி கடைகளில் இனிப்பு, கார வகைகள் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இனிப்பு, காரம் என ஒரே இடத்தில், சுவையாக செய்து தருகிறார்கள் விழுப்புரம் டூ பானாம்பட்டு சாலையில் அமைந்துள்ள நெல்லை ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ் கடையை சேர்ந்தவர்கள்.
இந்த கடை கடந்த 25 வருடங்களாக இயங்கி வருவதாகவும் வீட்டு முறைப்படி, விறகு அடுப்பில் இனிப்பு வகைகள் தயார் செய்து விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றார் இந்த கடையின் உரிமையாளர் கனகலட்சுமி. 49 வயதுடைய இவர் இனிப்பு வகைகளில் 12 வகையும் கார வகைகளில் 13 பலகார வகையும் செய்து தருகிறார். அதிரசம், லட்டு, பாதுஷா, எள்ளடை, புதினா எள் அடை, முறுக்கு, கார முறுக்கு, பூண்டு முறுக்கு, ஜாங்கிரி, குலோப் ஜாமுன், பால்கோவா, நெய் மைசூர் பாக்கு, பூந்தி, சோமாஸ், ரவா லட்டு போன்ற தின்பண்டங்கள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.
தொடர்ந்து நம்மிடம் பேசிய கனகலட்சுமி, தந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் போன காரணமாக இனிப்பு வகைகளை தயாரிக்கும் தொழிலை கைவிட்டதாவும் பின்னர் தனக்கு திருமணம் நடந்த நிலையில் திருமணம் நடைபெற்று 5 ஆண்டுகளிலேயே கணவனை இழந்து விட்டதாகவும் வேதனை தெரிவித்தார். ஆனாலும் தங்களிடம் இனிப்பு வகைகளை வாங்கிய வாடிக்கையாளர்கள், கடைக்கு வந்து நீங்கள் மறுபடியும் இனிப்பு வகைகளை செய்ய தொடங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். குடும்பத்தை சமாளிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்ததால் வீட்டிலேயே சிறியதாக தொடங்கியதாக தெரிவித்தார்.
மேலும், துணைக்கு ஒரு பெண்ணை வைத்து தொடங்கிய இந்த வேலை தற்போது 16 பேர் வேலை செய்து வருவதாகவும் அனைவரும் திருமணமான பெண்கள் என்றும், திருமணத்திற்கு பிறகு பெண்கள் சிலர் வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் வாய்ப்பு வழங்கப்பட்டடுள்ளதாக தெரிவித்தார். இவர்களை வைத்து தற்போது வெற்றிகரமாக 25 வருடங்களாக இந்த கடையை நடத்தி வரும் கனகலட்சுமி, திருமணமான பெண்களாலும் நிச்சயமாக சாதிக்க முடியும் என்பதற்கு நாங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதாக கனகலட்சுமி சிங்கபெண் தெரிவித்தார்.
October 14, 2025 3:00 PM IST

