Last Updated:
லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் 387 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியும் 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 100 ரன்களும், ரிஷப் பந்த் 74 ரன்களும், ஜடேஜா 72 ரன்களும் விளாசினர். இதையடுத்து அன்றைய நாள் முடிவதற்கு முன்னர் 5 நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய வந்தது.
அப்போது அதிக ஓவர்களை விளையாடாமல் இருக்க இங்கிலாந்து அணி முடிந்தவரை முயற்சி செய்தது. முதல் ஓவரை இந்தியாவின் முக்கிய வேகப்பந்துவீச்சாளரான பும்ரா வீசினார். இங்கிலாந்து பேட்ஸ்மேனான ஜாக் கிராலி அப்போது முடிந்தவரை நேரத்தை கடத்தினார். பும்ரா ஓடி வரும்போது பிட்சை விட்டு வெளியேறுவது போல் இருந்தார். அப்போது சுப்மன் கில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சிறிய சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கடைசி பந்தை பும்ரா வீச, கையில் காயம் ஏற்பட்டதுபோல ஜாக் கிராலி சைகை செய்தார். அவர் நடிக்கிறார் எனக் கூறி இந்திய வீரர்கள் அனைவரும் அவரது நடிப்பிற்காக கைதட்டினர். போட்டி முடியும்போது இது மிகவும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
ஆனாலும், பென் டக்கெட் உள்ளே வந்து சுப்மன் கில்லிடம் வாக்குவாதம் செய்தார். பதிலுக்கு சுப்மன் கில்லும் அவரிடம் கையை நீட்டிப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. 3-வது நாளின் ஆட்டத்தை விரைவில் முடிக்க, இங்கிலாந்து அணி வீரர்கள் செய்ததை நெட்டிசன்கள் மட்டுமின்றி ஸ்டூவர்ட் பிராட், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் கிண்டலடித்து வருகின்றனர்.
July 13, 2025 10:10 AM IST


