India
oi-Vigneshkumar
கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரி மகள் பிரிஸ்டி முகர்ஜி காடக், பிர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட்டில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். 28 வயதான பிரிஸ்டி முகர்ஜி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேற்கு வங்க தேர்தலில் ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில், அங்கு இப்போது சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு நடந்து வருகிறது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கட்சியில் இருக்கும் நிலையில், அங்கு தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் நடந்துள்ளது.

மம்தா சகோதரி மகள் தற்கொலை
இதற்கிடையே மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரி மகள் பிரிஸ்டி முகர்ஜி காடக் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். 28 வயதான பிரிஸ்டி முகர்ஜி தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த விசாரணையை தொடங்கியுள்ளனர். ராம்பூர்ஹாட்டில் உள்ள அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் இருக்கும் அறையில் இருந்து பிரிஸ்டியின் உடல் பிற்பகலில் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரது உடல் ராம்பூர்ஹாட் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அவரது மரணத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே மரணத்துக்கான காரணம் குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மன அழுத்தம்
பிரிஸ்டி கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது கணவருடனான விவாகரத்து தொடர்பான சட்ட நடவடிக்கைகளும் நடைபெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பள்ளி ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பான வழக்கிலும் பிரிஸ்டியின் பெயர் இடம்பெற்றிருந்தது. அவர் ஆசிரியர் பணியை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடைபெற்ற நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த வழக்கில், பல்வேறு நியமனங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அதில் பிரிஸ்டியும் சிக்கிய நிலையில், அவரும் தனது ஆசிரியர் பணியை இழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களால் அவர் மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார்.
விசாரணை
இந்த சூழலில் தான் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரிஸ்டி முகர்ஜியின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். கடைசியாக அவரை சந்தித்து யார் உள்ளிட்ட விவரங்களை கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர் தற்கொலை
பிரிஸ்டியின் மரணம் நிகழ்ந்துள்ள நிலையில், இதற்கு சில நாட்களுக்கு முன்பு ராம்பூர்ஹாட்டில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு வங்க சட்டசபையின் முன்னாள் துணை சபாநாயகருமான ஆஷிஷ் பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை ராம்பூர்ஹாட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்த அவர், தனது மரணத்துக்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்தக் கடிதத்தில் தன் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருந்ததுடன், தன்னை களங்கப்படுத்த முயற்சிகள் நடப்பதாக குறிப்பிட்டிருந்தார். அடுத்தடுத்து சில நாட்களுக்குள் ராம்பூர்ஹாட்டில் நடைபெற்ற இந்த இரு தற்கொலை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது



