Last Updated:
“ஒரு ரூபாய்க்கு ஷூ” என்ற அதிரடி விளம்பரத்தால் கல்லா கட்ட நினைத்த உரிமையாளர்களுக்கு, கடை திறந்த முதல் நாளிலேயே சிறை வாசல் திறக்கப்பட்ட சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளாவில் ஒரு ரூபாய்க்கு ஷூ வழங்குவதாக விளம்பரம் செய்த கடை முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் களேபரம் ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் போர்க்களமாக மாறியது. நடந்தது என்ன…?
பழைய ஒரு ரூபாய் நாணயத்தைக் கொண்டுவரும் முதல் நூறு பேருக்கு பிராண்டட் ஷூ என்ற அறிவிப்பால் கோழிக்கோடு நகரமே ஸ்தம்பித்தது. எப்படியாவது ஒத்த ரூபாய் ஷூவை வாங்கிவிட வேண்டும் என்ற வேட்கையில் அதிகாலை 3 மணிக்கே கடை முன்பு கூடிய கூட்டத்தில் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டு ரணகளமாகியுள்ளது. கடை திறப்பு விழாவின்போது உரிமையாளர்களுக்கு சிறை வாசல் திறக்கப்பட்டதன் பின்னணி என்ன…?
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பஜார் பகுதியில் மக்கள் நடமாட்டம் நிறைந்திருப்பதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். நகரின் பிஸியான இடத்தில் காலணி கடை ஒன்று திறக்கப்பட்டது. இதையொட்டி வாடிக்கையாளர்களை கவரவும், விளம்பரம் தேடிக் கொள்ளவும் அதன் உரிமையாளர் புது முயற்சியை கையில் எடுத்துள்ளார். இதற்காக, “ஒரு ரூபாய்க்கு ஷூ” என்ற அதிரடி சலுகையை அறிவித்துள்ளார்.
கடை திறப்பு விழாவை ஒட்டி பழைய ஒரு ரூபாய் நாணயத்தை கொண்டுவந்தால், முதல் நூறு பேருக்கு ஒரு ரூபாய்க்கு ஷூ வழங்கப்படும் என இணையத்தில் விளம்பரம் செய்யப்பட்டது. அந்த விளம்பரத்தை பார்த்த இளைஞர்கள் பலரும் அதிகாலை 3 மணிக்கே கடையின் முன்பு வரிசையில் காத்திருந்தனர். எதிர்பார்த்ததைவிட கூட்டம் எக்குத்தப்பாக எகிறியுள்ளது. கடை திறக்கப்பட்டு 10 மணிக்குத்தான் வியாபாரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் குவிந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கடை ஊழியர்கள் திண்டாடியுள்ளனர். விபரீதத்தை உணர்ந்து முன்கூட்டியே சிலருக்கு சலுகை விலையில் ஷூ வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதை அறிந்து பெரும் திரளாக காத்திருந்தவர்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து வந்துள்ளனர்.
அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் முதலில் கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதைக் கேட்காததால் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். லத்தியை கண்டு அஞ்சிய கூட்டம் தலைதெறிக்க ஓடியதால் அப்பகுதியே களேபரமானது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி விளம்பரம் செய்ததாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி கடையின் உரிமையாளர்களை கைது செய்தனர்.
“ஒரு ரூபாய்க்கு ஷூ” என்ற அதிரடி விளம்பரத்தால் கல்லா கட்ட நினைத்த உரிமையாளர்களுக்கு, கடை திறந்த முதல் நாளிலேயே சிறை வாசல் திறக்கப்பட்ட சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.


