Last Updated:
அமெரிக்காவை அவமதிப்பதாகவும், நீங்கள் எங்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கூறியதால் அதிருப்தியடைந்த ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தையை மேற்கொண்டு தொடராமல் புறக்கணித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான சந்திப்பின் போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் புறக்கணித்துச் சென்றார். டிரம்ப் – ஜெலென்ஸ்கி வார்த்தை மோதலுக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளன.
ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு தாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அளித்த உதவிகளுக்குக் கைம்மாறாக அந்த நாட்டின் அரிய வகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையின்றி வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினார். இதுதொடர்பாகப் பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக அமெரிக்காவுக்கு வருகை தந்த ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ரஷ்யாவுடன் போரிடுவதற்கு உக்ரைனில் ஆண்கள் இல்லை எனத் தெரிவித்ததால் கோபமடைந்த ஜெலென்ஸ்கி, தங்கள் நாட்டிற்கு வந்து பார்க்குமாறு அழைத்தார்.
இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் அதிகரிக்கவே அதிபர் டிரம்ப் குறுக்கிட்டு, அதிபர் ஜெலென்ஸ்கியைப் பார்த்து, “அமெரிக்கா என்ன உணரப் போகிறது என்று கட்டளையிடும் நிலையில் நீங்கள் இல்லை” எனக் கடுமையான வார்த்தைகளால் குறிப்பிட்டார். “மூன்றாம் உலகப் போருடன் சூதாட்டம்” செய்வதாகவும் ஜெலென்ஸ்கியை டிரம்ப் நேரடியாகக் குற்றம்சாட்டினார்.
தங்களின் முன்னாள் அதிபர் ஜோ பைடனை முட்டாள் எனக் குறிப்பிட்ட டிரம்ப், அமெரிக்காவின் ஆயுத தளவாடங்கள் இல்லையென்றால் இந்தப் போர் இரண்டு வாரங்களில் முடிந்திருக்கும் என்றும் காரசாரமாகக் கூறினார்.
அமெரிக்காவை அவமதிப்பதாகவும், நீங்கள் எங்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கூறியதால் அதிருப்தியடைந்த ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தையை மேற்கொண்டு தொடராமல் புறக்கணித்தார். இதனால் வெள்ளை மாளிகையில் இருவரும் கூட்டாகப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கனிமவள ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்வையும், மதிய விருந்தையும் புறக்கணித்துவிட்டு ஜெலென்ஸ்கி புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிக்க: “அமெரிக்காவில் வாழ்வது மகிழ்ச்சியாக இல்லை” – அமெரிக்கர்கள் கொடுத்த அதிர்ச்சி தரும் தகவல்கள்!
இந்நிலையில், அதிபர் டிரம்ப் அலுவலகம் விடுத்துள்ள செய்தியில், அமெரிக்கா தலையிடுவதால் அதிபர் ஜெலென்ஸ்கி அமைதிக்குத் தயாராக இல்லை என்று தீர்மானித்துள்ளதாகவும், அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தை அவமதித்தாலும் அமைதிக்குத் தயாராக இருக்கும்போது அவர் திரும்பி வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, டிரம்ப்-ஜெலென்ஸ்கி-வான்ஸ் இடையிலான வார்த்தை மோதலுக்குப் பிறகு ஐரோப்பியத் தலைவர்கள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டைத் தெரிவித்து வருகின்றனர். பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளன.
March 01, 2025 10:09 AM IST
அதிபர்கள் டிரம்ப் – ஜெலென்ஸ்கி இடையே நேரடி வாக்குவாதம்..! அதிருப்தியில் வெளியேறிய ஜெலென்ஸ்கி – என்ன நடந்தது?


