பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் இயங்கிவந்த ஒன்பது பயங்கரவாதி முகாம்களை துல்லியமாக குறிவைத்து இந்திய ராணுவம் அழித்தது. இதற்கு எதிர்வினையாக இந்திய எல்லையில் உள்ள கிராமங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியது. இதில், அப்பாவி பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா தாக்கியதற்கு பதிலாக பாகிஸ்தான் இந்திய மக்கள் மீது தாக்குதலை நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம், பாகிஸ்தானின் ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து நேற்று (8ஆம் தேதி) இரவு, பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லைகளான ஜம்மு, பதான்கோட், உதம்பூர் மற்றும் வேறு சில இடங்களில் உள்ள இந்திய ராணுவ நிலையங்களை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்க முயற்சித்தது. ஆனால், அவை அனைத்தையும் இந்திய ராணுவம் வானிலேயே இடைமறித்து அழித்தது. இதனால், தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், தெற்காசியாவில் அணு ஆயுதம் கொண்ட நாடுகளாக இந்தியாவும், பாகிஸ்தானும் உள்ளன. இவை இரண்டும் அண்டைநாடுகளாகவும் உள்ளன. இதனால், தற்போது உலகம் தெற்காசியாவை உன்னிப்பாக கவனித்துவருகிறது.
அணு ஆயுதம்: மக்களை கொத்தாக கொன்று குவிக்கும் கொடூர ஆயுதம் இந்த அணு ஆயுதம். எனவே உலகமே அணு ஆயுத பயன்பாட்டை விரும்பவில்லை. காரணம் ஏற்கனவே அதன் பாதிப்பை உலகம் உணர்ந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது, 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 6-9ல் ஜப்பானின் ஹிரோஷிமா – நாகசாகி மீது அமெரிக்கா வீசிய அணு ஆயுதத்தால் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் என்பது மீளமுடியாத ரத்தம் தோய்ந்த உலக வரலாறு.
அணு ஆயுதம் ஒப்பந்தங்கள்: உலக அளவில் அணு ஆயுதம் கொண்டுள்ள ஒன்பது நாடுகளில் இந்தியாவும், பாகிஸ்தானும் உள்ளன. ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவிடம் தோராயமாக 172 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், பாகிஸ்தானிடம் ஒப்பிடத்தக்க ஆயுதக் கிடங்கு சுமார் 170 இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
உலக அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு சட்டம் (global Non-Proliferation Treaty) ஒப்பந்தச் சட்டத்தில், இந்தியாவும், பாகிஸ்தானும் கையெழுத்திடாமல் இருக்கும் நாடுகள். அதேசமயம் 1988ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போட்ட ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் அணு ஆயுதத் தாக்குதலை மேற்கொள்ளமாட்டோம் எனத் தெரிவித்துள்ளன.
இந்தியா முதலில் அணு ஆயுதம் பயன்படுத்தாது. அதேசமயம் தங்கள் மீது பயன்படுத்தினால் நாங்களும் பயன்படுத்துவோம் எனும் கொள்கையை கடைபிடித்துவருகிறது. அதேசமயம், பாகிஸ்தானின் அணு ஆயுத கொள்கை திட்டமிட்டே தெளிவற்ற நிலையில் வைத்துள்ளது.

