Last Updated:
பாகிஸ்தான் ISI தலைவர் முகமது ஆசிம் மாலிக்கிற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் பாகிஸ்தானின் ISI தலைவராக உள்ள முகமது ஆசிம் மாலிக்கிற்கு, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 22ஆம் தேதி காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் காலியாக இருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பணியிடத்திற்கான இடத்தை பாகிஸ்தான் நிரப்பியுள்ளது. அதன்படி, பாகிஸ்தானின் உளவுத்துறை தலைவர் முகமது ஆசிம் மாலிக்கிற்கு, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கூடுதல் பொறுப்பு வழங்க பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பாகிஸ்தானின் 10வது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள ஆசிம் மாலிக், ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய பொறுப்பு வகிக்கும் முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் தலைமறைவானார் என சொல்லப்பட்டது. சில தகவல்கள் அவர் பாகிஸ்தானின் ராவல்பாண்டி பங்கரில் ஒளிந்திருந்திருப்பதாகவும், சில தகவல்கள் அவர் நாட்டைவிட்டு ஓடிவிட்டதாகவும் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டது. அதில், (NIM) மற்றும் PMA காகுலின் அதிகாரிகள், PMA காகுலில் 151வது நீண்ட பாடநெறியின் பட்டம் பெறும் அதிகாரிகளுடன் ஒரு குழு புகைப்படம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தில், அந்நாட்டின் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி முனீர் ஆகியோர் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


