நமது நிருபர்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதிமுக, பாஜகவை சேர்ந்த வழக்குரைஞர்கள் இருவர் தரப்பில் தனித் தனியாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கடந்த டிச. 23-ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவரை போலீஸôர் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் ஓர் உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கவும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அதிமுகவை சேர்ந்த வழக்குரைஞர் ஆர். வரலட்சுமி என்பவர் வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீநிவாசன் மூலம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஏதேனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் தங்களது வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, பாஜக வழக்குரைஞர் ஏ. மோகன்தாஸ் சார்பாக வழக்குரைஞர் ஜி.எஸ். மணியும் உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிலும் இதே கோரிக்கை வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

