Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
சென்னை: பாஜகவில் இருந்து விலகி தனி இயக்கம் தொடங்கியுள்ள அண்ணாமலை, செப்டம்பர் 14ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பின் தமிழ்நாடு முழுவதும் பயணித்து தனது கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் அண்ணாமலை திட்டமிட்டிருக்கிறார்.
சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக அரசியல் களம் தேசியக் கட்சிகளின் பிடியில் இருந்து விடுபட்டு, மாநிலக் கட்சிகளின் ஆதிக்கத்தை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருகிறது. அண்மையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் ராஜினாமா செய்துவிட்டு, ‘We The Leaders’ என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கம் ஒன்றைத் தொடங்கினார்.

இந்தத் தற்காலிக இயக்கத்தை மாநில அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் அண்ணாமலை தீவிரமாக இறங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜகவிலிருந்து விலகிய போது, தனது இயக்கம் எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
தற்போது கிடைத்துள்ள புதிய தகவல்களின்படி, வரும் செப்டம்பர் 14ஆம் தேதி தனது புதிய அரசியல் கட்சியின் பெயர், கொடி மற்றும் கொள்கைகளை அதிகாரப்பூர்வமாக அண்ணாமலை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சிந்தனைகள் மற்றும் அறிவியல் வளர்ச்சி என்ற கொள்கைகளின் அடிப்படையில் இந்தக் கட்சி அமையவுள்ளதாக சொல்லப்படுகிறது.
கட்சியின் பெயரை அறிவித்த கையோடு, விஜய்யின் தவெக மற்றும் திமுகவின் கட்டமைப்பிற்கு சவால்விடும் வகையில் மாநிலம் தழுவிய பிரசாரப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவும் அவர் வியூகம் வகுத்துள்ளார். ஏற்கனவே ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் அறியப்பட்ட முகமாக அண்ணாமலை மாறினார்.
இம்முறை தனது சொந்தக் கட்சியின் கிளைக் கட்டமைப்பை அடிமட்ட அளவில் வலுப்படுத்த இந்தத் தமிழ்நாடு தழுவிய பயணத்தைப் மேற்கொள்ள உள்ளார். பாரம்பரிய வாரிசு அரசியல் மற்றும் திராவிடக் கட்சிகளின் கலாச்சாரத்திற்கு மாற்றாக, சாமானிய மக்களுக்கான புதிய அரசியல் தளத்தை உருவாக்குவதே தனது நோக்கம் என அண்ணாமலை கூறி வருகிறார்.
தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கியைத் தன் வசம் இழுக்க அண்ணாமலை முயன்று வரும் வேளையில், அவரது இந்த புதிய கட்சி அறிவிப்பு மற்றும் மாநிலப் பயணம், அதிமுக மற்றும் தவெக போன்ற கட்சிகளுக்கு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

