Last Updated:
அணு ஆயுதத்தை கொண்டு தாக்குவோம் என்ற பூச்சாண்டியை எப்போதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டோம். அணு ஆயுத சோதனைக்கு எல்லாம் பயப்பட மாட்டோம். நாட்டு மக்களை காப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத இலக்குகளை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதைத்தொடர்ந்து எல்லையில் இரு நாட்டுப் படைகள் நேரடி மோதலில் ஈடுபட்டதால் போர் பதற்றம் நிலவியது. இந்திய ராணுவத்தின் பதிலடியில் நிலைகுலைந்த பாகிஸ்தான், சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இரு நாட்டு ராணுவ தளபதிகள் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
இதனால், இரு நாட்டு எல்லையோரத்தில் அமைதி திரும்பியது. இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் ராணுவத் தலைமை இயக்குநர்கள் இடையே இன்று பேச்சுவார்த்தையும் நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஆபரேஷன் சிந்துர் துவங்கி முடிந்துள்ள நிலையில், முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, “ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம். நமது பலத்தை கடந்த சில நாட்களாக காட்டி வருகிறோம். ராணுவ வீரர்கள், விஞ்ஞானிகள், உளவுத்துறை ஆகியோருக்கு நன்றி. ஆபரேஷன் சிந்துர் இந்திய மகள்களிடம் சமர்ப்பணிக்கிறேன்.
இப்படி ஒரு தாக்குதல் நடக்கும் என தீவிரவாதிகள் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். இவ்வளவு பெரிய முடிவுகளை இந்தியா எடுக்கும் என தீவிரவாதிகள் எதிர்பார்க்கவில்லை. நமது பெண்களின் குங்குமத்தை அழித்ததற்காக தீவிரவாத முகாம்களின் தலைமையகங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை மே 7 ஆம் தேதி ஒட்டுமொத்த உலகமே கண்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கினோம். முற்ட்கே, பாகவல்பூர் பகுதிகளில் இருந்த தீவிரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. தீவிரவாதத்தை இந்தியா வேட்டையாடியதை உலகமே கண்டது. தீவிரவாதத்தை எதிர்க்க முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது.
தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு பதில், பாகிஸ்தான், இந்தியாவை தாக்கியது. பாகிஸ்தான் நமது எல்லைகளை தாக்கியது. நாம் பாகிஸ்தான் இதயத்தை தாக்கினோம். இந்தியா மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் பாகிஸ்தான் உலக நாடுகள் முன் அம்பலமாகிவிட்டது. பாகிஸ்தானில் தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாடி வருகிறார்கள். இந்தியாவின் சாதாரண மக்களின் இடங்களை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. ஆனால், நாம் பாகிஸ்தானுக்குள் சென்றே பதிலடி கொடுத்துள்ளோம். பாகிஸ்தானின் ஏவுகணைகள் சீட்டு கட்டு போல் சுக்கு நூறாக வீழ்த்தப்பட்டன.
அணு ஆயுதத்தை கொண்டு தாக்குவோம் என்ற பூச்சாண்டியை எப்போதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டோம். அணு ஆயுத சோதனைக்கு எல்லாம் பயப்பட மாட்டோம். நாட்டு மக்களை காப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயார். இந்தியாவின் எதிர் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் அமைதியை தேடியது. பாகிஸ்தான் அதிகாரிகள்தான் இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டு சண்டை நிறுத்தம் கேட்டனர்.
போர் நிறுத்தம் தற்காலிகம் தான். பாகிஸ்தானை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எங்களது சேனைகள் எப்போதும் தாக்குதலுக்கு தயாராக உள்ளன. தீவிரவாதத்தை வேரோடு அழிக்க தயாராக இருக்கிறோம். தீவிரவாதமும் வர்த்தகமும் ஒன்றாக செல்ல முடியாது” எனத் தெரிவித்தார்.


