Last Updated:
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் புதிதாக 1,000 புதிய ரயில்களை அறிமுகப்படுத்தவும், 2027-ஆம் ஆண்டுக்குள் வணிகரீதியான புல்லட் ரயிலின் இயக்கத்தை தொடங்கவும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக ETயிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
ரயில் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி…! இந்திய ரயில்வே விரைவில் 1,000 புதிய ரயில்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த தகவல் அளித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய ரயில்வேயின் நெட்வொர்க் திறனை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும், பயணிகள் அனுபவத்தை மேம்படுத்தவும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் புதிதாக 1,000 புதிய ரயில்களை அறிமுகப்படுத்தவும், 2027-ஆம் ஆண்டுக்குள் வணிகரீதியான புல்லட் ரயிலின் இயக்கத்தை தொடங்கவும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக ETயிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இந்திய ரயில்வேயில் செய்யப்படும் மாற்றங்கள், நம் ரயில்வேயை ரயில் ஏற்றுமதியில் உலகளாவிய அளவில் ஒரு முக்கிய பங்களிப்பாளராக மாற்றுவதற்கான நீண்டகால தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாகும் என்றார்.
இந்தியாவில் கடந்த 11 ஆண்டுகளில் சுமார் 35,000 கி.மீ. தூரத்திற்கு புதிதாக தண்டவாளங்களை சேர்த்துள்ளதாகவும், இது ஜெர்மனியின் முழு நெட்வொர்க்கின் அளவிற்கு சமம் என்றும் மத்திய அமைச்சர் வைஷ்ணவ் கூறினார். இந்திய ரயில்வே ஒரு வருடத்தில் மட்டும் 5,300 கி.மீ. நெட்வொர்க்கை சேர்த்துள்ளதாகக் கூறிய அவர், ஆண்டுதோறும் 30,000 வேகன்களும், 1,500 என்ஜின்களும் தயாரிக்கப்படுகின்றன, இது வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த உற்பத்தியைவிட அதிகம் என்றார்.
மேலும், ரயில்வேயில் செய்யப்படும் முதலீடு ரூ.25,000 கோடியிலிருந்து ரூ.2.52 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், பொதுத்துறை-தனியார் பங்களிப்புகளிலிருந்து கூடுதலாக ரூ.20,000 கோடி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புல்லட் ரயில் திட்டம் குறித்து பேசிய அஸ்வினி வைஷ்ணவ், ஜப்பானின் ஒத்துழைப்புடன் புல்லட் ரயில் திட்டம் முன்னேறி வருவதாகவும், முதல் புல்லட் ரயில் புரோட்டோடைப் 2026-ல் இயங்கும் என்றும் 2027-ஆம் ஆண்டு முதல் இந்திய புல்லட் ரயில் திட்டம் வணிகரீதியான வெளியீட்டை இலக்காகக் கொண்டு செயல்படும் என்றும் கூறினார். பயணிகளின் பாதுகாப்பு குறித்து பேசிய வைஷ்ணவ், ஆண்டுதோறும் 170 ரயில் விபத்துக்களில் இருந்து தற்போது 30-க்கும் குறைவாக குறைந்துள்ளதாகவும், கடந்த பத்தாண்டுகளில் ஒட்டுமொத்த ரயில் விபத்துகள் 80% குறைந்துள்ளதாகவும் கூறினார்.
இவ்வளவு தூரம் ரயில் விபத்துகள் குறைந்துள்ளதற்கு ரயில்வேயின் தினசரி பாதுகாப்பு மதிப்பாய்வுகள் மற்றும் ட்ராக், பாயின்ட்ஸ் மற்றும் சிக்னலிங் சிஸ்டம்களின் மேம்பாடுகள் காரணம் என்று பாராட்டு தெரிவித்தார். “நெடுஞ்சாலைகளுடன் ஒப்பிடும்போது ஒரு டன்-கி.மீ.க்கு பாதிக்கும் குறைவான செலவில் சரக்கு போக்குவரத்தை ரயில்வே வழங்குகிறது. மேலும், இவை 95% சுற்றுச்சூழலுக்கு உகந்தவை” என்றும் குறிப்பிட்டார்.
July 12, 2025 6:00 PM IST
அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 புதிய ரயில்களை அறிமுகப்படுத்த உள்ள இந்திய ரயில்வே…! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்…


