சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சி போன்ற அசாதாரண சூழல்களால், கடந்த சில ஆண்டுகளாகவே தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் உள்ளது. தற்போது தங்கத்திற்கு இணையாக வெள்ளியின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருவது கவனிக்கத்தக்கது.
வெள்ளியின் இந்த விலை உயர்வு என்பது தற்காலிகமான சந்தை ஏற்ற இறக்கம் (Market Fluctuation) அல்ல; மாறாக, இது ஒரு கட்டமைப்பு சார்ந்த மாற்றத்தின் (Structural Change) விளைவாக உருவான நிலையான போக்கு. தங்கத்தின் விலை எட்டாத உயரத்திற்குச் செல்வதால், அதற்குச் சிறந்த மாற்றாகவும், அதே நேரத்தில் மிக முக்கியமான தொழில்துறை உலோகமாகவும் வெள்ளி உருவெடுத்துள்ளது.
இந்தியச் சமூகத்தில் நீண்டகாலமாகவே வெள்ளி ஒரு பாரம்பரியப் பொருளாகப் பார்க்கப்படுகிறது. பூஜைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களில் இதன் பயன்பாடு தொடர்ந்தாலும், தற்போது தொழில்துறை தேவைகள் அதனை விட வேகமாக வளர்ந்து வருகின்றன. பல தளங்களில் ஒரே நேரத்தில் வெள்ளிக்கான தேவை அதிகரித்துள்ளதாக ஆசிரியர் தெரிவித்தார்.
பசுமை பொருளாதாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், சோலார் துறையில் வெள்ளியின் பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்கிறது. மின் ஒட்டுமொத்த திறன், மின்னணு பரிமாற்றம் மற்றும் நீடித்த செயல்திறன் போன்ற காரணங்களால், வெள்ளிக்கு முழுமையான மாற்று உலோகம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் விளைவாக, தொழில்துறை தேவையை குறைக்கும் சாத்தியம் மிகக் குறைவாகவே உள்ளது.
தேவை ஒருபுறம் அதிகரித்தாலும், அதன் உற்பத்தி பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. சுரங்க வளங்களின் பற்றாக்குறை, அதிகரித்து வரும் உற்பத்திச் செலவு மற்றும் கடுமையான சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள் காரணமாக வெள்ளியின் வரத்து (Supply) குறைந்துள்ளது. இந்தத் ‘தேவை – வழங்கல்’ இடைவெளி (Demand- Supply Gap) விலை உயர்வுக்கு வலுவான அடித்தளமாக அமைகிறது
இந்தியாவில் கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரவு, செலவுத் திட்டங்களில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்புகள், மறைமுகமாக வெள்ளி தேவையை அதிகரித்துள்ளன. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் கொள்கைகள், வெள்ளியை அதிகமாக பயன்படுத்தும் தொழில்களை வளர்ச்சியடையச் செய்துள்ளன. இதன் காரணமாக, வெள்ளி குடும்ப பயன்பாட்டைத் தாண்டி, உற்பத்தித் துறைகளின் அடிப்படை மூலப்பொருளாக மாறியுள்ளது.
மற்றொரு முக்கிய அம்சம் முதலீட்டு மனநிலையின் மாற்றம். நிலம் மற்றும் தங்க முதலீடுகளுக்கு அப்பால், கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் வெள்ளியை முதலீட்டு சொத்தாக பார்க்கும் போக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு போன்ற தொழில்துறை வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் இந்த போக்கு தெளிவாகக் காணப்படுகிறது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் உலகச் சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால், பாதுகாப்பான முதலீடாக மக்கள் வெள்ளியைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
அடுத்த 5 ஆண்டுகளில்: இன்றையச் சந்தையில் வெள்ளிப் பொருட்கள், கட்டிகள் மட்டுமின்றி, வங்கிச் சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் பங்குச் சந்தை கருவிகள் (Silver ETFs) மூலமாகவும் முதலீடு செய்ய வாய்ப்புகள் பெருகியுள்ளன. இருப்பினும், நீண்ட கால முதலீட்டாளர்களின் பார்வையில், உட்பொருள் வெள்ளி இன்னும் முக்கியத்துவம் பெற்றே உள்ளதாகவும் முத்துராஜ் தெரிவித்தார்
பொருளாதாரக் கோணத்தில் ஆராயும்போது, அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் வெள்ளியின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு எனப் பேராசிரியர் முத்துராஜ் சுட்டிக்காட்டுகிறார். தொழில்நுட்ப ரீதியாகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு, வெள்ளிக்கு மாற்று உலோகம் கண்டறியப்படும் வரை, வெள்ளிச் சந்தை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
