Last Updated:
தனது உடல்நிலையை காரணம் காட்டி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர், ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துவதாக தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்ட நிலையில், இரண்டு மாதங்களுக்குள் புதிய குடியரசுத் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 74 வயதான ஜெகதீப் தன்கர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்றார். மாநிலங்களவையின் தலைவராகவும் இருந்து வந்த அவர், இன்னும் 2 ஆண்டு பதவிக்காலம் இருக்கும் நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.
இதன்மூலம் குடியரசுத் தலைவர் தேர்தல் அல்லாத வேறு காரணங்களுக்காக பதவி விலகிய முதல் குடியரசுத் துணைத் தலைவராக தன்கர் உள்ளார். மாநிலங்களவைத் தலைவர் என்ற முறையில் எதிர்க்கட்சிகளுக்கும், குடியரசுத் துணைத் தலைவருக்கும் ஆன மோதல்போக்கு வழக்கமானதுதான் என்றாலும் எதிர்க்கட்சிகளுடனான தன்கரின் அணுகுமுறை மிகவும் விமர்சனத்திற்குள்ளானது. 2024 டிசம்பரில், தன்கர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்தன.
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு குடியரசுத் துணைத் தலைவர் மீது இவ்வாறு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது அதுவே முதல் முறை. இந்த நிலையில், தனது உடல்நிலையை காரணம் காட்டி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர், ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துவதாக தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க தீர்மான கடிதத்தை மத்திய அரசுக்கு தெரியாமல் விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட விவகாரத்தால் குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
ஆனால், அதற்கு முன்பாகவே எதிர்க்கட்சிகள் இந்த தீர்மானத்தை மாநிலங்களவையில் கொண்டு வந்தன. அதனை ஜெகதீப் தன்கர் ஏற்றுக் கொண்டதால் அவர் மீது மத்திய அரசு அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்தே ஜெகதீப் தன்கர், முன் அனுமதி பெறாமலேயே திடீரென்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியதாகத் தெரிகிறது.
மேலும் கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை தன்கர் சந்தித்தனர். எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தன்கர் நெருக்கம் காட்டியதையும் மத்திய அரசு தரப்பு விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று நீதித்துறையில் ஊழலை ஒழிக்க தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் போன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தன்கர் பேசியதும் மத்திய அரசு விரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
July 23, 2025 6:42 AM IST


