அகதிகள் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பின் கீழ் பணிபுரிய அனுமதிப்பது தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தவும் உதவும் என்று மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு (MEF) கூறுகிறது. அதன் தலைவர் டத்தோ டாக்டர் சையத் ஹுசைன் சையத் ஹுஸ்மான் தெரிவித்தார். தற்போது நாட்டில் 185,000 க்கும் மேற்பட்ட அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் வேலை செய்யும் வயதுடையவர்கள் என்பதோடு பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் திறன் கொண்டவர்கள் என்று கூறினார்.
திறன்கள், விருப்பம்,பங்களிக்கும் திறன் இருந்தபோதிலும், அவர்கள் முறையான வேலைவாய்ப்புக்கு சட்ட மற்றும் நடைமுறை தடைகளை எதிர்கொள்கின்றனர் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். தொழில் ரீதியாகவும் மனிதாபிமான ரீதியாகவும் நிர்வகிக்கப்பட்டால், அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்களை முறையான தொழிலாளர் சந்தையில் ஒருங்கிணைப்பது பல அழுத்தமான தேசிய சவால்களை எதிர்கொள்ள சாதகமாக உதவும் என்று MEF நம்புகிறது. கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் துறைகளில் குறிப்பாக விவசாயம், கட்டுமானம், உற்பத்தி பராமரிப்பு சேவை ஆகிய துறைகளை அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தில் (UNHCR) பதிவுசெய்யப்பட்டவர்களுக்கு மலேசியாவில் முறையான வேலை அணுகலை வழங்க அனுமதிக்க சையத் ஹுசைன் முன்மொழிந்தார். இது போர், மோதல், துன்புறுத்தலின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வணிகங்கள் மற்றும் நுகர்வோருக்கு தெளிவான நன்மைகளுடன் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கவும் உதவும் என்று அவர் மேலும் கூறினார்.
அகதிகள் வேலைவாய்ப்பை முறைப்படுத்துவது அதிகரித்த தொழிலாளர் உற்பத்தி, நுகர்வு, வரிவிதிப்பு, தொழில்முனைவு மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை ஆதரிக்கும் என்று MEF நம்புகிறது. தொழிலாளர் சட்டங்களுடன் இணங்குவதை ஊக்குவிப்பதன் மூலம் சுரண்டல் மற்றும் சட்டவிரோத பணியமர்த்தலைக் குறைக்கலாம். அதே நேரத்தில் ஏற்கெனவே உள்ள பணியாளர்களைப் பயன்படுத்துவதன் மூலம் முதலாளிகளின் நேரத்தையும் ஆட்சேர்ப்பு செலவுகளையும் மிச்சப்படுத்தலாம் என்று சையத் ஹுசைன் கூறினார்.
அனைத்துலக தொழிலாளர் அமைப்பு, UNHCR ஆகியவற்றின் கூட்டு ஆய்வை அவர் மேற்கோள் காட்டினார். இது அகதிகளை வேலை செய்ய அனுமதிப்பது காலப்போக்கில் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 0.5% வரை உயர்த்தக்கூடும் என்று கண்டறிந்தது. அகதிகள், புகலிடம் கோருவோர் மக்கள்தொகையில் 30 முதல் 40% வரை முறையான வேலைச் சந்தையில் அணுகல் வழங்கப்பட்டால், இது மலேசியாவின் தொழிலாளர் படையில் 55,000 முதல் 75,000 ஊழியர்களைச் சேர்க்கலாம். உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என்பதோடு தேசிய பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் என்று அவர் கூறினார்.
இது உள்ளூர் தொழிலாளர்களை, குறிப்பாக மலேசியர்களால் புறக்கணிக்கப்படும் (அழுக்கு, ஆபத்தான மற்றும் கடினமான) 3D வேலைகளில், இடமாற்றம் செய்யாது என்று சையத் ஹுசைன் வலியுறுத்தினார். இது வெளிநாட்டு தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் மற்றும் சட்டவிரோத உழைப்புடன் தொடர்புடைய அமலாக்கச் செலவுகளைக் குறைக்கும் என்று அவர் கூறினார். இந்த நடவடிக்கை மனித உரிமைகள் மீதான மலேசியாவின் அனைத்துலக நிலைப்பாட்டை வலுப்படுத்தும் வணிகம், மனித உரிமைகள் மீதான ஐ.நா. வழிகாட்டும் கொள்கைகள் மற்றும் ESG எதிர்பார்ப்புகள் போன்ற உலகளாவிய தரநிலைகளுடன் ஒத்துப்போகும் என்று சையத் ஹுசைன் கூறினார்.
சட்டப் பணி நிலையை வரையறுக்கும், கடமைகள், உரிமைகளை கோடிட்டுக் காட்டும், திறன் அங்கீகாரத்தை ஒருங்கிணைக்கும் மற்றும் சரியான சரிபார்ப்பு மற்றும் கண்காணிப்பு வழிமுறைகளை உள்ளடக்கிய தெளிவான, வெளிப்படையான கொள்கை கட்டமைப்பை உருவாக்க முதலாளிகள், தொழிற்சங்கங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைக்க MEF அரசாங்கத்தை அழைக்கிறது. மலேசியாவின் முறையான பணியாளர்களில் அகதிகள், புகலிடம் கோருபவர்களைச் சேர்ப்பது ஒரு வெற்றி-வெற்றி உத்தி என்று MEF நம்புகிறது. இது பொருளாதார மீள்தன்மையை வலுப்படுத்துகிறது. வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது மற்றும் மலேசியாவின் மனிதாபிமான உறுதிப்பாடுகளை நிலைநிறுத்துகிறது என்றும் அவர் கூறினார்.




