Last Updated:
FIFA WC | மெக்சிகோவின் குவாதலஜராவில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் ஏ பிரிவு ஆட்டத்தில் தென் கொரியா, செக் குடியரசு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
FIFA கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் செக் குடியரசு அணியை வீழ்த்தி தென் கொரியா த்ரில் வெற்றி பெற்றது.
கால்பந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் 48 நாடுகள் 12 பிரிவுகளில் பங்கேற்றுள்ளன. அதன்படி, மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற முதல் போட்டியில் சொந்த மண்ணில் மெக்சிகோ வென்றது.
இதையடுத்து, மெக்சிகோவின் குவாதலஜராவில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் ஏ பிரிவு ஆட்டத்தில் தென் கொரியா, செக் குடியரசு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 2006க்குப் பிறகு முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் செக் குடியரசு அணி, கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியாமல் திணறியது.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க தவறிய நிலையில், இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் லாடிஸ்லாவ் கிரெஞ்சி முதல் கோல் அடிக்க, செக் குடியரசு அணி 1க்கு 0 என முன்னிலை பெற்றது. கம்பேக் கொடுத்த தென் கொரிய அணி 67ஆவது நிமிடத்தில் கோல் அடித்து 1க்கு 1 என சமன் செய்ததால் ஆட்டம் விறுவிறுப்பானது.
பின்னர், 80ஆவது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து தென் கொரியா வெற்றியை உறுதி செய்தது. அதற்கு பிறகு இரண்டு கோல் வாய்ப்புகள் செக் குடியரசு அணிக்குக் கிட்டினாலும், தென் கொரிய கோல் கீப்பர்கள் அட்டகாசமாகத் தடுத்ததால் வெற்றி கோலாக மாறவில்லை. இறுதியாக, 2க்கு 1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு அணியை வீழ்த்திய தென் கொரியா, முதல் போட்டியிலேயே வென்று 3 புள்ளிகளைத் தட்டிச் சென்றது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


