Last Updated:
சிவம் துபே 6-வது பந்துவீச்சாளராகச் சரியாகச் செயல்படாததும், ஃபீல்டிங்கில் கேட்ச்களைத் தவறவிடுவதும் இந்தியாவுக்குப் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றில் நாளை இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. இதையொட்டி அணியில் முக்கிய மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து அணியோ பாகிஸ்தான் மற்றும் இலங்கையை வீழ்த்தி மிகுந்த உத்வேகத்துடன் உள்ளது. கடந்த இரண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதிகளிலும் இவ்விரு அணிகளே மோதிக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அபிஷேக் சர்மா, இந்த உலகக் கோப்பையில் ஃபார்ம் அவுட்டில் இருப்பது இந்திய அணிக்கு பெரும் கவலை அளிக்கிறது. 6 இன்னிங்ஸ்களில் வெறும் 80 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவர், மூன்று முறை டக்-அவுட் ஆகியுள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிராக அரைசதம் கடந்தாலும், முக்கியமான போட்டிகளில் சொதப்புவது அவர் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், 2025-ல் இங்கிலாந்துக்கு எதிராக இதே வான்கேடே மைதானத்தில் அவர் அதிகபட்ச ரன்களைக் குவித்து சாதனை படைத்தவர் என்பதால், அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம். ஒருவேளை மாற்றம் செய்யப்பட்டால், இஷான் கிஷன் மீண்டும் தொடக்க வீரராகக் களமிறங்க வாய்ப்புள்ளது.
இந்திய அணியின் பந்துவீச்சு சமீபத்திய போட்டிகளில் ரன்களை வாரி வழங்கியுள்ளது. நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக 180 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 195 ரன்களைக் கொடுத்தது.
இதனால் குல்தீப் யாதவ் மீண்டும் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், குல்தீப்பைச் சேர்க்க வேண்டுமானால் அக்சர் படேலை நீக்க வேண்டியிருக்கும், இது பேட்டிங் பலத்தைக் குறைக்கும். மேலும், சிவம் துபே 6-வது பந்துவீச்சாளராகச் சரியாகச் செயல்படாததும், ஃபீல்டிங்கில் கேட்ச்களைத் தவறவிடுவதும் இந்தியாவுக்குப் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.


