Tamil Cricket News: பங்களாதேஷ் அணியுடனான போட்டியின் போது இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் முறையில் அவுட் செய்யப்பட்டார்.
பங்களாதேஷ் அணியுடனான போட்டியின் போது இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் முறையில் அவுட் செய்யப்பட்டார்.
ஹெல்மட் பிரச்சனை காரணமாகவே ஏஞ்சலோ மேத்யூஸ் பேட்டிங் செய்ய வருவதற்கு தாமதம் ஏற்பட்டதாக விளக்கம் அளித்தும், நடுவர்கள் மற்றும் பங்களாதேஷ் அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் ஏற்கவில்லை.
இதன் மூலமாக சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் டைம் அவுட் மூலமாக அவுட் செய்யப்பட்ட முதல் வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார் மேத்யூஸ்.
அதன்பின் ஆட்டம் முடிவடைந்த பின் இலங்கை அணி வீரர்கள் பங்களாதேஷ் வீரர்களுடன் கைகளை குலுக்கி சமாதானமாக செல்லாமல் ஓய்வறைக்கு திரும்பியது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஏஞ்சலோ மேத்யூஸ் சகோதரர் ட்ரிவின் மேத்யூஸ், பங்களாதேஷ் அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மேத்யூஸ் சகோதரர் பேசுகையில், “ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் காரணமாக வீழ்த்தப்பட்டது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. பங்களாதேஷ் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு எந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பும் கிடையாது.
கிரிக்கெட் போன்ற ஜெண்டில்மேன் ஆட்டத்தில் கூட கொஞ்சம் கூட மனிததன்மையின்றி செயல்பட்டுள்ளார். நிச்சயம் ஷாகிப் அல் ஹசன் இலங்கைக்கு வரவேற்கப்பட மாட்டார்.
ஒருவேளை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலோ அல்லது எல்பிஎல் தொடரிலோ விளையாட ஷாகிப் அல் ஹசன் இலங்கை வந்தால், கற்களை வீசி அவர் மீது தாக்குதல் நடத்த நேரிடும் அல்லது இலங்கை ரசிகர்களின் எரிச்சலை அவர் சந்திக்க நேரிடும்” என்று கூறியுள்ளார்.
டைம் அவுட் விவகாரத்தில் ஏஞ்சலோ மேத்யூஸ் குடும்பத்தினர் சார்பாக ஷாகிப் அல் ஹசனுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிசி விதிகளின் படி அவுட் செய்யப்பட்ட ஒரு வீரருக்கு இப்படி எச்சரிக்கை விடுப்பது சரியில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.