சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.48,120-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை வரலாற்றில் முதன்முறையாக ஒரு பவுன் தங்கம் விலை ரூ.48 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதனால்,நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.43,040 ஆக விற்பனையானது. தொடர்ந்து விலை ஏறுமுகமாகவே இருந்தது. டிசம்பர் 23-ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.47 ஆயிரமாக உயர்ந்து எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியது. பின்னர் தங்கம் விலை குறைந்து ரூ.46 ஆயிரத்துக்குள் விற்பனை ஆனது. இதற்கிடையே, இம்மாதம் 2-ம் தேதி பவுனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.47,520க்கும் விற்பனையானது. இந்நிலையில், நேற்று மீண்டும் அதிகரித்தது.
இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.85 அதிகரித்து ரூ.6,015-க்கும், பவுனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.48,120-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை வரலாற்றில் முதன்முறையாக ஒரு பவுன் ரூ.48 ஆயிரத்தை எட்டியுள்ளதை கண்டு, நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர். இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை சவரன் ரூ.51,880-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.78.20-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.78,200 ஆக உள்ளது.
இதுகுறித்து, சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாந்தகுமார் கூறு கையில், ‘‘அமெரிக்காவில் வங்கிகளில் முதலீடுகளுக்கான வட்டி வகிதம் குறையும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால், சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. மேலும், சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
இதுவே தங்கம் விலை உயர்வதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. மேலும், இந்த விலை உயர்வு ஓரிரு வாரங்கள் வரை நீடிக்கும். அத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் மீண்டும் வரலாறு காணாத அளவுக்கு விலை அதிகரிக்கும்’’ என்றார்.