ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஒலிம்பிக் 2020 போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கின. கொரோனா காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று (ஜுலை.24) காலை முதல் பல்வேறு பதக்கங்களுக்கான போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பொறுங்க.. பொறுங்க.. இதில் இந்தியாவின் நிலை என்னனு தானே கேட்குறீங்க.. தொடர்ந்து படிங்க.
காலை முதன் முதலாக தொடங்கிய போட்டியில், இந்தியாவுக்கு சோகமே மிஞ்சியது. ஆம்! இன்று முதன் முதலாக நடந்த பதக்க போட்டியான, துப்பாக்கி சுடுதலில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில், இந்தியாவின் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சண்டேலா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். இருவரும் தொடக்க முதல் இறுதி வரை மாறி மாறி சொதப்ப, இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தனர். குறிப்பாக, இளவேனில் மீது பெரும் நம்பிக்கை இருந்தது. ஏனெனில், துப்பாக்கிச் சூட்டில் இரண்டு முறை உலக சாம்பியன் அவர் என்பதால், எப்படியும் மெடல் வெல்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. எனினும், ஏமாற்றமே மிஞ்சியது.
இதைத் தொடர்ந்து, வில்வித்தை போட்டிகள் தொடங்கின. இதில், கலப்பு அணிகள் பிரிவு வெளியேற்றுதல் சுற்றில், இந்தியாவின் பிரவீன் ஜாதவ் – தீபிகா குமாரி இணை காலிறுதிக்கு முன்னேறியது. இன்று காலை நடைபெற்ற இப்போட்டியில் சீன தைபே அணியை – இந்திய அணி எதிர்கொண்டது. இதில், 5-3 என்ற கணக்கில் வென்று இந்தியா காலிறுதிக்கு முன்னேறியது. ஸோ, இன்று இந்தியாவின் முதல் நல்ல செய்தி இதுதான்.
இதையடுத்து, இன்று காலை நடந்த ஹாக்கி போட்டி ஆண்கள் பிரிவில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 3-2 என்று கோல் கணக்கில் இந்தியா த்ரில் வெற்றிப் பெற்றது. நிச்சயம், போட்டியை டிவியில் பார்த்த ரசிகர்களுக்கு ஹார்ட் பீட் எகிறியிருக்கும். எப்படியோ.. இன்றைய காலை பொழுதில், இந்திய ரசிகர்களுக்கான தித்திப்பான இரண்டாவது செய்தியாக இது அமைந்தது.
இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இன்று முதல் தங்கத்தை வென்றிருக்கிறது சீனா. பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் சீனாவின் யாங் கியான் (Yang Qian) தங்கம் வென்றார். ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
சுவிட்சர்லாந்தின் நினா கிறிஸ்டன் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த பிரிவில் தான் இந்தியாவின் இளவேனில் வாலறிவன், அபூர்வி தோற்று வெளியேறினார்கள். சீனாவின் கியான் பெற்ற மொத்த புள்ளிகள் 251.8 ஆகும். இதுதான் ஒலிம்பிக் தொடரில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் அதிகபட்ச புள்ளிகளாகும். அதவாது, ஒலிம்பிக்கில் தனது அதிகபட்ச புள்ளிகள் மூலம் புதிய சாதனையே படைத்திருக்கிறார் யாங். வாழ்த்துகள்!