இங்கிலாந்து வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என பீட்டர்சன் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ஆஸ்லே கில்ஸ் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் ஐபிஎல்-ஐ புறம்தள்ளிவிட்டு சொந்த நாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். இது மறைமுகமாக வீரர்களுக்கு ஐபிஎல்-ல் பங்கேற்க கூடாது என அழுத்தம் கொடுத்தது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தலையிட்டுள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், ஐபிஎல் மீண்டும் நடைபெற்றால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது சிறந்த வீரர்கள் அதில் பங்கேற்பதை எப்படி தடுக்கப்போகிறது என்பதை பார்க்க ஆவலுடன் உள்ளேன்.
நான் இங்கிலாந்து வாரியத்திற்கு எதிராக குரல் கொடுத்த போது தனியாக ஆளாக இருந்தேன். இப்போது அணியின் சிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஐபிஎல்-ல் விளையாடலாம் என தெரிவித்துள்ளார்.
இந்த ட்வீட்டிற்கு பின்னால் பீட்டர்சனின் வரலாறும் உள்ளது. அவரின் 9 வருட கிரிக்கெட் அனுபவத்தில் பல சர்ச்சைகளை எதிர்கொண்டுள்ளார். அதில் முக்கியமான ஒன்று ஐபிஎல்-ல் பங்கேற்றது. இங்கிலாந்து வாரியம் அனுமதி அளிக்காத போதும் அதை மீறி ஐபிஎல்-ல் பங்கேற்றார். இதன் விளைவாக திடீரென்று கடந்த 2014ம் ஆண்டு ஓய்வை அறிவித்தார் கெவின் பீட்டர்சன்.
இந்த பிரச்னைகளுக்கு இடையே ஐபிஎல் தொடர் இங்கிலாந்தில் நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இந்திய அணி தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
செப்டம்பர் 14ம் தேதி வரை இந்திய அணி அங்கு இருக்கும் என்பதால் அந்த மாதத்திலேயே ஐபிஎல் தொடரை அங்கு நடத்துவது சரியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனினும் பிசிசிஐ இதுகுறித்து எந்த முடிவும் இன்னும் எடுக்கவில்லை.