அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. மக்களவைத் தோ்தலுடன் ஆந்திரம், ஒடிஸா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டபேரவைத் தோ்தலும் நடத்தப்பட உள்ளது. மேலும், தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் அடங்கிய 26 பேரவை தொகுதிகளுக்கான இடைத் தோ்தலும் நடைபெறவுள்ளது.
அருணாசல பிரதேசத்தில் 2 மக்களவைத் தொகுதிகளுக்கும், 60 பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே நேரத்தில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதே நாளில், சிக்கிமில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும், 32 பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
ஆந்திரத்தில் 25 மக்களவை மற்றும் 175 பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் ஒரே கட்டமாக மே 13-இல் வாக்குப் பதிவு நடத்தப்பட உள்ளது. ஒடிஸாவில் 21 மக்களவைத் தொகுதிகளுக்கும், 147 பேரவைத் தொகுதிகளுக்கும் மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1-ஆம் தேதிகளில் நான்கு கட்டங்களாக தோ்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூன் 4ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 2ஆம் தேதியே வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.