கொல்கத்தாவைச் சேர்ந்தவர் நடன கலைஞர் அமர்நாத் கோஷ். குச்சிப்புடி, பரதநாட்டியம் ஆகிய நடனக் கலைகளில் கைதேர்ந்தவர். சென்னையில் உள்ள கலாஷேத்ரா அகாடமியின் முன்னாள் மாணவரும் ஆவார். மேலும், புகழ்பெற்ற நடனக் கலைஞர்களான போபிதா டே சர்க்கார், ஸ்ரீ எம்.வி.நரசிம்மாச்சாரி, பத்மஸ்ரீ அடையார் கே.லக்ஷ்மண் ஆகியோரிடம் பயிற்சி பெற்றவர்.
இந்த நிலையில் இவர் அமெரிக்காவில் தங்கி அங்குள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடனத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அந்நாட்டின் மசூரி மாகாணத்தில் உள்ள மிசோரியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபரால் அமர்நாத் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
அமர்நாத்தின் சிறுவயதிலேயே, அவருடைய தந்தை உயிரிழந்து விட்டார். 3 ஆண்டுகளுக்கு முன்பு, அவருடைய தாயாரும் உயிரிழந்து உள்ளார். ஒரே மகனான அவருடைய பெற்றோர் இருவரும் இல்லாத சூழலில், அமர்நாத்தின் உடலை பெற்று இறுதி சடங்கு மேற்கொள்ள அமெரிக்காவில் உள்ள அவரது நண்பர்கள் முயன்று வருவதாக தெரிகிறது.
இந்நிலையில், அமர்நாத் கோஷ் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அவரது நண்பரும், தொலைக்காட்சி நடிகையான தேவோலீனா பட்டாச்சார்ஜி வலியுறுத்தி உள்ளார். துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டவரின் விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் அமர்நாத்துக்காக குரல் கொடுக்க உறவினர்கள் யாரும் இல்லை எனவும் அவர் வேதனையுடன் தனது எக்ஸ் சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
My friend #Amarnathghosh was shot & killed in St louis academy neigbourhood, US on tuesday evening.
Only child in the family, mother died 3 years back. Father passed away during his childhood.
Well the reason , accused details everything are not revealed yet or perhaps no one…
— Devoleena Bhattacharjee (@Devoleena_23) March 1, 2024
இதற்காக, இந்திய தூதரகம் மற்றும் வெளி விவகாரத் துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரையும் அவர் தொடர்பு கொண்டு உள்ளார். அமர்நாத்தின் படுகொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றியாவது தெரிய வேண்டும் என்று தேவோலீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுபற்றி அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியில், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் உதவியுடன் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக தெரியவந்துள்ளது. குற்றவாளி பிடிபட்ட பின்னரே நடன கலைஞர் அமர்நாத் கோஷின் கொலைக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்தியர்களின் மீது தாக்குதல் நடத்தப்படுவதும் சமீப காலங்களில் அதிகரித்துள்ளன. கடந்த இரு மாதங்களில் மட்டும் இந்திய மாணவர்கள் 5 பேர் தனித்தனியான தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…