படுகொலை செய்யப்பட்ட பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினி தரவுகள் தொடர்பான நிபுணர் அறிக்கையை நீதிமன்றில் உடனடியாக சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல அரசாங்க பரிசோதகர்க்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை புதன்கிழமை (20) வழங்கினார்.
உயிரிழந்தவர் பயன்படுத்திய இலத்திரனியல் சாதனங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், நினைவூட்டல் கடிதத்தை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இறந்தவரின் கையடக்க தொலைபேசி எண்ணை மனைவிக்கு வியாபார நோக்கத்திற்காக வழங்குவது தொடர்பான கோரிக்கை அரசாங்கத்தின் நிபுணர் அறிக்கையைப் பெற்ற பின்னர் பரிசீலிக்கப்படும் என்றும் மேலதிக நீதவான் தெரிவித்தார்.
தொடர்புடைய சிம்பை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து, அடுத்த விசாரணை அமர்வில் அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிஐடியினரால் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
தினேஷ் ஷாப்டர் கொல்லப்படுவதற்கு முன்னர் தினேஷ் ஷாப்டர் வியாபாரத்திற்கு பயன்படுத்திய தொலைபேசி இலக்கத்தை காட்டி சிம் கார்ட் அல்லது புதிய சிம்கார்டை பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிடுமாறு அவரது மனைவி கோரியமை தொடர்பிலான உண்மைகளை தெரிவிக்கும் போதே நீதவான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக அறிக்கையை சமர்ப்பித்துள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
பொரளை பொது மயானத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற மர்மச் சம்பவத்தினால் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷாப்டர் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 16 ஆம் திகதி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.