Last Updated:
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிகுண்டு சம்பவம் நடந்த இரண்டாம் நாளான இன்று வாரணாசிக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கிறது.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் கேட் 1 அருகே கடந்த 10ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு கார் வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதில் 13 பேர் பலியாகியுள்ள நிலையில், 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடையதாக காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் முஷாமில் கானேய் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதையடுத்து உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த பெண் மருத்துவர் ஷாஹீன் ஷாஹித் என்பவர் கைது செய்யப்பட்டார். லால் பாக் பகுதியை சேர்ந்த மருத்துவர் ஷாஹீன் ஷாஹித்தின் காரில் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முஷாமில் கானேய் உடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து டெல்லி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் மகளிர் பிரிவான ஜமாத் உல் மொமினாத் அமைப்பின் இந்திய பிரிவை ஷாஹீன் ஷாஹித் நிறுவி தலைமை வகித்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரத்தை என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது.
“One of our flights to Varanasi received a security threat. In line with protocol, the Government-appointed Bomb Threat Assessment Committee was immediately alerted, and all necessary security procedures promptly initiated. The flight landed safely and all passengers have been…
— ANI (@ANI) November 12, 2025
இந்நிலையில், வாரணாசிக்கு இயக்கப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் கூறியதாவது: “வாரணாசிக்குச் செல்லும் எங்கள் விமானங்களில் ஒன்று பாதுகாப்பு அச்சுறுத்தலைப் பெற்றது.
உடனே விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, வெடிகுண்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பாதுகாப்பு சோதனைகளும் முடிந்ததும் விமானம் இயக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
November 12, 2025 6:42 PM IST
டெல்லி வெடிகுண்டு சம்பவம் முடிந்து இரண்டாம் நாள்.. வாரணாசி ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!


