Last Updated:
பிகார் தேர்தல் இரண்டாம் கட்டத்தில் 122 தொகுதிகளில் 1 மணி வரை 47.62% வாக்குகள் பதிவு.
மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, 121 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து, மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
இந்த இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 122 தொகுதிகளில் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் மூன்று கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், அவர்களுக்காக 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் வாக்குப்பதிவு மாலை ஆறு மணி வரை நடைபெறுகிறது. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக செயின்பூர், கோவிந்த்பூர், ராஜௌலி, ஜமுய், சிகந்திரா, சக்காய் மற்றும் ஜஜா ஆகிய ஏழு தொகுதிகளில் மாலை ஐந்து மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும்.
இந்நிலையில், 122 தொகுதிகளில் பிற்பகல் 1 மணி வரை மொத்தம் 47.62% வாக்குகள் பதிவாகியிருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், கிஷன்கஞ்ச் தொகுதியில் அதிகப்பட்சமாக 51.86%, கயாவில் 50.91% மற்றும் ஜமுய் தொகுதியில் 50.07% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 6ஆம் தேதி நடந்த முதற்கட்ட வாக்குப் பதிவில் பிகாரின் 73 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு 64.66% வாக்குகள் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
November 11, 2025 2:58 PM IST


