தெற்கைப்போன்று வடக்கிற்கும் சமனான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுங்கள் தெற்கில் உள்ளோர் காணும் அதே உலகத்தை, அதே உலகியல் அனுபவத்துக்கான வாய்ப்பை வடக்கில் உள்ளோரும் பெறுவது தான் சமத்துவமென தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
பாராளுமன்றில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற 2026ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் மீதான 3 ஆன் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இந்தத் தீவில் உள்ள அனைவருக்கும் சம அளவான வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதைப் உறுதிப்படுத்துவதே சமத்துவம் என எண்ணுகிறோம். போருக்கு முன்னரான காலத்தில் சமச்சீரற்ற வள அணுகல் தொடர்பில் நாங்கள் குரல் எழுப்பவில்லை. குரல் எழுப்ப வேண்டிய தேவையும் எங்களுக்கு ஏற்படவில்லை. அப்போதிருந்த எங்களின் நிழல் அரசு அனைவருக்குமான வளப்பகிர்வை, தற்சார்பு வாழ்வியலை, போதை அறவே அற்ற, அறம் நிரம்பிய வாழ்வை சான்றாக்கி இருந்தது.
போருக்குப் பின்னரான காலத்தில் வன்னி மாவட்டம், குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் பல்வேறு தரப்படுத்தல்களிலும் கடைசி நிலையிலும் கடைசிக்கு அண்மைய நிலையிலும் விளங்கியதை இலங்கை அரசின் புள்ளிவிபரங்கள் காட்டின.
முல்லைத்தீவு கடற்பரப்பில் ஒவ்வொரு நாளும் தான் திருட்டுத் தொழில் நடைபெறுகிறது. கண்ணெதிரே சட்டத்துக்கு புறம்பாக நடைபெறும் இந்த மீன்பிடியை – ஊழலை, உங்கள் அரசால் ஏன் இன்னும் கட்டுப்படுத்த இயலவில்லை. ஊழல் எங்கு உள்ளது? அடுத்து வரும் ஓராண்டும் இந்த அரசு எங்கள் மீனவர்களின் வயிற்றில் அடிக்கப்போகிறதா?
இலத்திரனியல் வள நிரப்பலுக்கான நிதி ஒதுக்கீடு அனைத்து மாவட்டங்களுக்கும் சமத்துவ அடிப்படையில் கிடைப்பதை உறுதிப்படுத்துங்கள் என்றார்.

