டெல்லியில் குண்டுவெடிப்பு நடந்த கார் அரியானா பதிவெண் கொண்டது என்பதும், அதன் தற்போதைய உரிமையாளர் புல்வாமாவைச் சேர்ந்தவர் என்பதும் அம்பலமாகியுள்ளது.
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், ஹரியானாவில் 350 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் புலனாய்வு அமைப்புகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளன. காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பினருக்கு ஆதரவாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த வாரம் உத்தரபிரதேசத்தின் சாஹரான்பூரில் அடில் அகமது என்ற மருத்துவர் கைது செய்யப்பட்டார். அவருக்குச் சொந்தமான லாக்கரில் இருந்து ஏ.கே 47 வகை துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.
தொடர்ந்து, அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் வசித்து வரும் மற்றொரு மருத்துவரான முஜாமில் ஷகில் என்பவரது வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, 350 கிலோ வெடிமருந்துகள், டைமர்கள், துப்பாக்கி, பேட்டரிகள், வாக்கி டாக்கி, 12 சூட்கேஸ்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், டெல்லி செங்கோட்டை ரயில் நிலையம் அருகே குண்டுவெடிப்பு நடந்த ’Hyundai i20′ மாடல் கார் அரியானா மாநில பதிவெண் கொண்டது என்பதை விசாரணை அமைப்புகள் உறுதி செய்துள்ளன. ’HR 26 CE 7674’ என்ற பதிவெண் கொண்ட அந்த காரின் முன்னாள் உரிமையாளர் அரியானாவைச் சேர்ந்த முகமது சல்மான் என்பது தெரியவர அவரை கைது செய்தனர்.
வெடித்த காரின் முன்னாள் உரிமையாளர் முகமது சல்மான், டெல்லியில் உள்ள ஓக்லா பகுதியைச் சேர்ந்த தேவேந்தர் என்பவரிடம் அந்த காரை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் விற்பனை செய்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார். அந்த காரின் தற்போதைய உரிமையாளர் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா அருகே உள்ள ஷம்புரா கிராமத்தைச் சேர்ந்த தாரிக் என்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
2014ம் ஆண்டு முதல் இந்த கார் நான்கு முறை முறைகேடாக விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. நான்கு முறையும் முறைப்படியாக பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. கடைசியாக தாரிக்கிற்கு ஃபரிதாபத்தில் உள்ள கார் விற்பனையாளர் மூலம் விற்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக குண்டுவெடிப்பு நடக்கும் முன் நேற்று மதியம் வடக்கு டெல்லியில் இந்த கார் பலமுறை சுற்றியிருப்பதை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். குறிப்பாக 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் கார் பதிவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டமான ’உபா’ சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, சென்னை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக, இரண்டாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள பிகாரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. கூட்டமான பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டுமெனவும், எச்சரிக்கையோடு இருக்கும்படியும் இந்தியாவில் உள்ள தங்கள் குடிமக்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
November 11, 2025 6:53 AM IST

