Last Updated:
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் வார சந்தையில் ஆடுகள், பந்தய சேவல்கள், நாட்டுக்கோழிகள் ரூ.4 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தகவல்.
சேலம் மாவட்டத்தில் தெடாவூர், கொளத்தூர், வீரகனூர், மேச்சேரி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் ஆட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது. வாரத்தில் சனி, வெள்ளி, ஞாயிறு என 3 நாட்கள் சந்தை கூடுகிறது. இந்த வார சந்தைக்கு மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் தெடாவூர், தேவூர், வீரகனூர், அரசிராமணி, நங்கவள்ளி, பூலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. விற்பனையும் வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொங்கணாபுரம் ஆட்டுச் சந்தைக்கு சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து ஆடுகள் வருகின்றன. இந்தச் சந்தை சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலேயே மிகப்பெரிய ஆட்டுச் சந்தையாகக் கருதப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) நடைபெற்ற கொங்கணாபுரம் வார சந்தையில் 6,600 ஆடுகள், 2,500 பந்தய சேவல்கள், நாட்டுக்கோழிகள், 127 டன் காய்கறிகள் என மொத்தமாக ரூ.4 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.
குறிப்பாக வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் மேச்சேரி இன ஆடுகள் போன்ற பல்வேறு இன ஆடுகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன. இந்த ஆடுகள், உள்ளூர் வியாபாரிகளால் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்கப்படுகின்றன. அதேபோல, கொளத்தூர் ஆட்டுச் சந்தையிலும் ரூபாய் 1.4 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Salem,Salem,Tamil Nadu
November 10, 2025 4:05 PM IST


