லக்னோ நீதிபதிக்கு காவலர் செல்போனில் இருந்துச் சென்ற கொலை மிரட்டல் மின் அஞ்சலால் நீதிபதி அதிர்ச்சிக்குள்ளானார். இந்த வழக்கில் லக்னோ சிறை காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ நீதிமன்றத்தின் நீதிபதிக்கு, “உங்களை கொல்லப்போகிறேன்” எனும் மெயில் வந்தது. இதனை பார்த்து அதிர்ந்துபோன அந்த நீதிபதி உடனடியாக சைபர் க்ரைம் காவல்துறையில் இது தொடர்பாக புகார் கொடுத்தார்.
புகாரை பெற்ற சைபர் க்ரைம் காவல்துறையினர், அது தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், லக்னோ சிறையில் இருக்கும் அஜய் குமார் எனும் காவலரின் செல்போனில் இருந்து இந்த கொலை மிரட்டல் மெயில் வந்திருப்பதை கண்டறிந்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் காவலர் அஜய் குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் காவல்துறைக்கு அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளது. காவல்துறை விசாரணையில், நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தது சுமார் ரூ. 3,700 கோடி சைபர் மோசடியில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் அனுபவ் மிட்டால் என்பவர் என்பது தெரியவந்தது.
சிறையில் இருப்பவரிடம் எப்படி காவலரின் செல்போன் கிடைத்தது என காவல்துறை அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த 4ஆம் தேதி வழக்கு விசாரணை தொடர்பாக காவலர் அஜய்குமார், அனுபவ் மிட்டாலை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அனுபவ், தன் வழக்கு தொடர்பான நிலையை அறிந்துகொள்வதாக கூறி தன்னிடம் போனை வாங்கி புதிதாக ஒரு மெயில் ஐடி-ஐ உருவாக்கி அதன் மூலம், நீதிபதிக்கு இந்த மிரட்டல் செய்தி அனுப்பியுள்ளார் என காவலர் அஜய்குமார் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அனுபவ் மிட்டால் எனும் நபர் சுமார் 7 லட்சம் பேரிடம் ரூ. 3,700 கோடி சைபர் க்ரைம் மோசடியில் ஈடுபட்டிருந்தார். இவர் கைது செய்யப்பட்டு, லக்னோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அனுபவ் மிட்டால் மற்றும் காவலர் அஜய்குமார் ஆகிய இருவர் மீதும் தற்போது காவல்துறையினர் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அனுபவ் மிட்டாலிடம், ஏன் நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்பன உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
காவலரின் செல்போனைக் கொண்டு மோசடி வழக்கில் சிறையில் இருக்கும் நபர், நீதிபதிக்கே கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
November 09, 2025 6:42 PM IST
காவலரின் செல்போனில் இருந்து நீதிபதிக்கு கொலை மிரட்டல்! ரூ. 3,700 கோடி வழக்கில் சிக்கியவர் செய்த பகீர் செயல்

