Last Updated:
மகளிருக்கான நிபந்தனையற்ற பணப் பரிமாற்ற திட்டங்களை (UCT) வழங்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 2022-23ஆம் ஆண்டில் 2 மாநிலங்களிலிருந்து 2025-26ஆம் ஆண்டில் 12 மாநிலங்களாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் உள்ள அரசுகள், பெண்களுக்கு நேரடியாக மாதாந்திர நிதியை தற்போது வழங்குகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மாநிலங்கள் மட்டுமே இப்படி செய்து வந்தநிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. இதுபோன்ற பெண்களுக்கான நிபந்தனையற்ற பணப் பரிமாற்றத் திட்டங்களுக்கான மொத்தச் செலவு 2025-26ஆம் ஆண்டுக்குள் தோராயமாக ரூ.1.68 லட்சம் கோடியை எட்டும் என்று PRS சட்டமன்ற ஆராய்ச்சி அறிக்கை தெரிவிக்கிறது.
நிதிரீதியிலான அழுத்தங்கள் மற்றும் அதிகரித்துவரும் நலத்திட்டங்களுக்கான செலவுகளுக்கு மத்தியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பிரதிபலிக்கும் வகையில், 2025-26ஆம் ஆண்டுக்குள் மகளிருக்கான பிரத்யேக பணப் பரிமாற்றத் திட்டங்களுக்கு 12 இந்திய மாநிலங்கள் சேர்ந்து ஒதுக்க திட்டமிட்டுள்ள தொகையின் அளவு ரூ.1.68 லட்சம் கோடியாக இருக்கும் என அறிக்கை கூறுகிறது.
அறிக்கைகளின்படி, பெரிதாக எந்த நிபந்தனைகளும் இல்லாமல் பெண்களுக்கு நேரடி பணப் பரிமாற்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கும் 12 மாநிலங்களில் பாதி அதாவது ஆறு மாநிலங்கள் இந்த ஆண்டு வருவாய் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என கணித்துள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது. இது பெண்களை மையமாகக் கொண்ட நலத்திட்டங்களின் விரைவான விரிவாக்கத்துடன், அதிகரித்துவரும் நிதிச்சுமையையும் வெளிப்படுத்துகிறது.
எனினும், UCT திட்டங்களுக்கான செலவினங்களைத் தவிர்த்து வருவாய் சமநிலையை சரிசெய்வது இந்த மாநிலங்களின் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காட்டுகிறது என்று அறிக்கை கூறியது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு மாதாந்திர நேரடி சலுகைகள் மூலம் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட நிபந்தனையற்ற பணப் பரிமாற்றத் திட்டங்கள் (UCT) பல மாநிலங்களில் ஒரு முக்கிய நலத்திட்ட அம்சமாக மாறியுள்ளன.
மகளிருக்கான நிபந்தனையற்ற பணப் பரிமாற்ற திட்டங்களை (UCT) வழங்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 2022-23ஆம் ஆண்டில் 2 மாநிலங்களிலிருந்து 2025-26ஆம் ஆண்டில் 12 மாநிலங்களாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டங்களின் மூலம் பயன்பெறுவோர் வருமான வரம்பு, வயது வரம்பு மற்றும் பிற அடிப்படை காரணிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அசாம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள், முந்தைய ஆண்டைவிட முறையே 31% மற்றும் 15% பெண்கள் UCT-க்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரித்துள்ளன.
அதேபோல தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை வழங்கும் நம் தமிழ்நாட்டின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மத்தியப் பிரதேசத்தின் லாட்லி பெஹ்னா யோஜனா மற்றும் கர்நாடகாவின் கிருஹா லட்சுமி திட்டம் ஆகியவை முக்கிய UCT திட்டங்களில் அடங்கும். இருப்பினும், மகளிருக்கான இந்த சிறப்புத் திட்டங்கள் அந்தந்த மாநில பட்ஜெட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அறிக்கை எச்சரித்துள்ளது.
உதாரணமாக, கர்நாடகா, UCT செலவுகளை தவிர்த்தால் அதன் GSDP-யில் 0.6% வருவாய் பற்றாக்குறையிலிருந்து 0.3% உபரிக்கு நகரும் என்று சரிபார்க்கப்பட்ட நிதி மதிப்பீடுகள் காட்டுகின்றன. இதேபோல், மத்தியப் பிரதேசத்தின் உபரி 0.4%-லிருந்து 1.1%ஆக மேம்படும். பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கான மானியங்கள் மற்றும் ரொக்கப் பரிமாற்றங்களுக்கான செலவினங்கள் அதிகரிப்பது உற்பத்தி நடவடிக்கைகளில் முதலீடு செய்ய நிதியை குறைக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முன்னதாக எச்சரித்திருந்தது.
நேரடி நிதி தனிநபர்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடும் என்றாலும், அது நீண்ட காலத்திற்கு மாநிலங்களின் பொருளாதார ஆரோக்கியத்தை பாதிக்கலாம். இதனிடையே செலவுகளை நிர்வகிக்க சில மாநிலங்கள் ஏற்கனவே சலுகைகளை குறைத்துள்ளன. மகாராஷ்டிரா ஏப்ரல் 2025-ல் முதல்வர் லட்கி பஹின் யோஜனாவின் கீழ் வழங்கப்பட்டுவந்த மாதாந்திர நிதியை குறைத்தது. அதே நேரத்தில் ஜார்கண்ட் 2024-ன் பிற்பகுதியில் முதல்வர் மையான் சம்மன் யோஜனாவின் கீழ் வழங்கப்பட்ட நிதியை மாதத்திற்கு ரூ.2,500-ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
November 09, 2025 2:05 PM IST
மகளிருக்கான நிதி திட்டங்களுக்கு 2025-26ம் ஆண்டில் ரூ.1.68 லட்சம் கோடி செலவிடவுள்ள 12 மாநிலங்கள்…! எவை தெரியுமா…?


