தெரு நாய் தொல்லை விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக பதிவுசெய்து விசாரித்து வருகிறது. கடந்தமுறை விசாரணையின்போது, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என். வி.அஞ்சாரியா அமர்வு முன்பு, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராகினர்.
அப்போது நாய்க்கடி பிரச்சினையைத் தடுக்க மாநிலங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தாக்கல் செய்த பதில் மனுக்களை ஆய்வு செய்த பின்னர், வழக்கில் கூடுதல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில்தான், தெரு நாய்கள் விவகாரத்தில் புதிய உத்தரவை உச்சநீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ளது.
அதில், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு விடுதிகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குள் தெரு நாய்கள் நுழையாத வகையில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று, பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களிலும் நாய்கள் புகாமல் இருக்க உள்ளாட்சி மற்றும் குறிப்பிட்ட நிர்வாக அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதிகளிலிருந்து பிடித்துச் செல்லப்படும் நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு ஊசி செலுத்தி, மீண்டும் அதே இடத்தில் விடக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு செய்ய தவறினால், அந்த இடங்களை தெரு நாய்கள் இல்லாத பகுதிகளாக மாற்றும் நோக்கம் நிறைவேறாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், நாய்கள் அங்கே குடியேறாமல் இருக்க இந்த இடங்களை உள்ளாட்சி அமைப்புகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
எந்தெந்த இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட வேண்டும் என்பதை 2 வாரத்திற்குள் கண்டறிந்து, அந்தப் பணிகளை 8 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதே போன்று, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், விரைவு சாலைகளில் சுற்றித்திரியும் மாடு, ஆடு, நாய் உள்ளிட்டவற்றை பிடித்து கோ சாலை அல்லது காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனை அனைத்து மாநிலங்களிலும் கடுமையாக பின்பற்றி, 8 வாரங்களுக்குள் அதற்கான அறிக்கையை தலைமைச் செயலாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
November 08, 2025 6:53 AM IST
“சாலைகளில் சுற்றித்திரியும் அப்புறப்படுத்த வேண்டும்” – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

