நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி ஹரியானா மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி நடந்துள்ளது. வாக்கு முறைகேடு நடந்துள்ளது என கூறினார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வாக்குத் திருட்டு குறித்து ஜென்சி இளம் தலைமுறையினர் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் மற்றும் இந்தியாவில் தற்போதுள்ள ஜனநாயக முறையை 100 சதவிகிதம் ஆதாரத்துடன் தான் கேள்வி கேட்பதாகக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, ஹரியானாவில் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததாகக் கூறினார்.
இந்நிலையில், ஹரியானாவில் பிரேசிலைச் சேர்ந்த இளம் மாடல் ஒருவரின் புகைப்படத்துடன் 22 வாக்குகள் பதிவாகி இருப்பதாக ராகுல் காந்தி ஆதாரத்தை வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், இதே போன்று, 2 வாக்குச்சாவடிகளில் ஒரு பெண்ணின் விவரங்கள் மட்டும் 223 முறை பதிவு செய்யப்பட்டு இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மேலும், ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் போலியானவை என்று ராகுல் காந்தி கூறினார். 8 வாக்காளர்களில் ஒருவர் போலி என்று கூறிய ராகுல் காந்தி, இதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “ராகுல் காந்தி நாட்டின் எதிரி. நாட்டின் எதிரிகள் ராகுல் காந்தியை விதைத்துவிட்டனர். நீதித்துறையையும், ராணுவத்தையும் பலவீனப்படுத்தி, பொதுமக்களிடையே மோதலை உருவாக்குங்கள்.
#WATCH | Ramnagar, Bihar: Assam CM Himanta Biswa Sarma says, “There’s a tsunami-like atmosphere for the BJP and Janata Dal in Bihar, and the BJP, Janata Dal, and all our allies are coming to power.”
“Rahul Gandhi is an enemy of the country, and the enemies of the country have… pic.twitter.com/KfDMIeCEdc
— ANI (@ANI) November 5, 2025
இந்த 10% விஷயம் தேசத்துரோகம். நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைத்து ராணுவ வீரர்களுக்கும் இது ஒரு அவமானம். அவர் முட்டாள்தனமாகப் பேசுகிறார், தேசத்துரோகம் பற்றிப் பேசுகிறார். ராகுல் காந்தி ஏன் மீண்டும் மீண்டும் வெளிநாடு செல்கிறார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். நமது அரசாங்கம் இதைப் பற்றி விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தேஜஸ்வி யாதவ் பிகார் தேர்தலில் வென்றால் ஜனவரி மாதம் ரூ. 30,000 வழங்கப்படும் என கூறிய கருத்திற்கும், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக நடத்திய போராட்டம் குறித்தும் பேசினார்.
இவ்விவகாரங்கள் குறித்து அவர் பேசியதாவது; “பிகார் மாநிலத்தின் துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் இருந்தபோது, பெண்கள் வங்கிக் கணக்கில் 3 ரூபாயையாவது அவர் டெப்பாசிட் செய்துள்ளாரா? தகுதி இருந்தபோதே 3 ரூபாயைக்கூட கொடுக்கமுடியாத தேஜஸ்வி இன்று ரூ. 30,000 குறித்து பேசுகிறார்.
அசாமில் என்.ஆர்.சி. நடைமுறைபடுத்தப்பட்டது. ஆனால், அது மேற்கு வங்கத்தில் நடைபெறவில்லை. உங்களுக்கு எஸ்.ஐ.ஆர். வேண்டாம் என்றால், என்.ஆர்.சி.க்கு சம்மதம் தெரிவியுங்கள். வங்கதேசத்தினர் வாக்குகளில் அவர்கள் உணவு உண்டு, தண்ணீர் அருந்தி வாழ்வார்கள்” என காட்டமாக தெரிவித்தார்.
அதேபோல், இந்த விவகாரம் குறித்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “இளம் தலைமுறையினர் பிரதமர் நரேந்திர மோடியுடன் நிற்கின்றனர். இதைத் திசைதிருப்பவும், நம் நாட்டை அவமதிக்கவும், ராகுல் காந்தி தேச விரோத சக்திகளுடன் சேர்ந்து இந்தச் சதித்திட்டங்களை செய்கிறார். இந்தச் சதித்திட்டங்கள் ஒருபோதும் வெற்றிபெறாது.
தேர்தல் ஆணையம், நமது ஜனநாயக அமைப்பு மற்றும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவது என்பது, நீங்கள் நமது நாட்டையும், அதன் அமைப்பையும் குறிவைக்கிறீர்கள் என்று அர்த்தம்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
November 05, 2025 6:25 PM IST
வாக்கு முறைகேடு: “ராகுல் காந்தி நாட்டின் எதிரி!” – அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பரபரப்பு

