கோலாலம்பூர்:
கோலாம்பூரிலுள்ள மாமன்னரின் அதிகாரப்பூர்வ இல்லமான இஸ்தானா நெகாராவுக்குள், காரில் ஆயுதத்துடன் அத்துமீறி நுழைய முயன்றதாகக் கூறப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (மே 17) மாலை 4.40 மணியளவில் நடந்ததாகவும், அவர்கள் நுழைவாயில் எண் மூன்று வழியாக ஜாலான் துவான்கு அப்துல் ஹலிம் அரண்மனை வளாகத்திற்குள் நுழைய முயன்றதாகவும் கோலாலம்பூர் காவல்துறை உயரதிகாரி ருஸ்டி முகமட் இசா கூறினார்.
மேலும், அவர்கள் இருவரையும் காவல்துறையினர் அரண்மனைக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர் என்றும் அவர் சொன்னார்.
காருக்குள் இருந்த இருவரும் மாட்சிமை தாங்கிய பேரரசர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தரை சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தனர் எனவும், அவர்களுடைய வாகனத்தைச் சோதனையிட்டதில் அவர்களிடம் கத்தி போன்ற பயங்கர ஆயுதம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ருஸ்டி தெரிவித்தார்.
“கைதுசெய்யப்பட்ட இருவரும் உள்ளூர்வாசிகள். அவர்கள் இருவரும் 29, 37 வயதினர்,” என அவர் கூறினார்.
அவர்கள் இருவரும் மே 21ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்துத் தவறான தகவல்கள் எதையும் பரப்ப வேண்டாம் என அவர் அனைவரையும் கேட்டுகொண்டார்.


