Last Updated:
ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் இந்திய மகளிர் அணி முதல் உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. பிரதமர் மோடி, ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தனர்.
மகளிர் உலகக் கோப்பையை வென்ற மிகவும் வயதான கேப்டன் என்ற பெருமையை ஹர்மன்ப்ரீத் கவுர் பெற்றுள்ளார்.
2005, 2017, 2020 என மூன்று முறை இறுதிப்போட்டிக்குச் சென்ற இந்திய மகளிர் அணி, முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. ஆஸ்திரேலியா ஏழு முறையும், இங்கிலாந்து நான்கு முறையும், நியூசிலாந்து ஒருமுறையும் உலகக் கோப்பையை வென்ற நிலையில், தற்போது இந்திய அணி முதல் கோப்பையை வசமாக்கியுள்ளது.
இந்திய மண்ணில் நடைபெறும் தொடரில் எப்படியாவது உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் தொடரை தொடங்கியது. லீக் சுற்றில் சற்று தடுமாறினாலும், அரையிறுதியில் பலமான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது இந்திய அணி.
52 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, முதன்முறையாக கோப்பையை வென்று வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்தது. கோப்பை வென்ற ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மகளிர் அணியினர், நெகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் மழையில் நனைந்து திளைத்தனர். இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உட்பட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 36 வயதான கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், மகளிர் உலகக் கோப்பையை வென்ற மிகவும் வயதான கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதேநேரம், கடந்த மூன்று ஐசிசி மகளிர் போட்டிகளில் இறுதிப்போட்டி வரை சென்ற தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இடத்தையே பிடித்துள்ளது.
போட்டிக்கு முன்னதாக பேசிய தென் ஆப்பிரிக்க கேப்டன், இந்திய ரசிகர்களை சைலண்ட் ஆக்குவேன் எனக் கூறியிருந்தார். ஆனால், தோல்விக்குப் பிறகு அவர் கதறி அழுதார். இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் அவர் அதிகபட்சமாக 101 ரன்கள் எடுத்திருந்த நிலையிலும், அணி தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
November 03, 2025 4:00 PM IST


