Last Updated:
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதால், பிஎஸ் 6 விதிமுறைகள் பின்பற்றாத வெளியூர் கனரக வாகனங்களுக்கு தடை; 23 குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றன.
பிஎஸ் 6 விதிமுறைகளுக்கு கீழ் வராத வெளியூர் கனரக வாகனங்கள் டெல்லிக்குள் வர விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது.
குளிர்காலம் தொடங்கிய நிலையில் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் சுவாசிப்பதில் கூட சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் காற்று மாசினை கட்டுப்படுத்த டெல்லி அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் அதிக காற்று மாசினை ஏற்படுத்தும் வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட, பிஎஸ் 6 விதிமுறைகளை பின்பற்றாத கனரக சரக்கு வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
இந்த உததரவு அமலுக்கு வந்த நிலையில் இதனை கண்காணிக்க டெல்லி போக்குவரத்து போலீசாருடன் இணைந்து செயல்பட 23 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 90 சதவீத வாகனங்கள் டெல்லிக்குள் வர பயன்படுத்தும் 23 முக்கிய பகுதிகளில் இந்த குழு கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளது.
பிஎஸ் 6 விதிமுறைகளுக்கு ஏற்ப வாகனங்களை தயார் செய்வதற்கு கால அவகாசம் வழங்கும் வகையில், பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு மட்டும் 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி, எல்என்ஜி, மின்சார சரக்கு வாகனங்களுக்கு எந்த தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
November 02, 2025 8:25 AM IST


