அந்த வகையில் பல வகையான வெடிகளை நாம் வாங்கி வெடித்தாலும் உள்ளூரில் தயாரிக்கப்படும் நாட்டு வெடிகளுக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவலங்காடு என்னும் ஊரில் பாலமுருகன் என்பவர் 4 தலைமுறைகளாக வாண வெடிகளைத் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், “முன்னோர்களான எங்கள் தாத்தா காலத்தில் இந்த தொழில் தொடங்கப்பட்டது. அதன்பிறகு என் அப்பா, என் சித்தப்பா, என் அண்ணன், தற்போது நான் இந்த தொழிலைச் செய்து வருகிறேன். மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதியில் நிறைய இடங்களில் நாட்டு வெடிகள் தயார் செய்தாலும் திருவலங்காட்டில் செய்யப்படும் வெடிகளுக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உள்ளது.
இது இவ்வளவு ஃபேமஸ் ஆக காரணம் என் தாத்தா தான். பல இடர்ப்பாடுகள் நடுவே மக்களின் ஆதரவு, அதிகாரிகளின் ஒத்துழைப்பால் தான் இந்த தொழிலைச் செய்து வருகிறோம். வாடிக்கையாளர் எங்களிடம் தான் வாங்க வேண்டும் என விரும்புவது தான் நாங்கள் தொழில் செய்ய எங்களை ஊக்குவிக்கின்றன. அதற்கு தகுந்தாற் போல் நாங்களும் செய்து தருகிறோம்.
தீபாவளியைப் பொறுத்தவரை ஓலைவெடிகள் தான் ஃபேமஸ். பாரம்பரியமான வெடியான அதனையும் தயார் செய்கின்றோம். இந்த நாட்டு வெடி பேப்பர்களை சுற்றி வைத்து தயார் செய்கிறோம். ரூ.2 முதல் ரூ.250 வரை வெடிகள் விற்பனை செய்கிறோம்.
இந்த வெடியில் மாப்பிள்ளை வெடி என்று ஒன்று உள்ளது. அது ரொம்ப பெரிய வெடியாக இருக்கும். மாப்பிள்ளையை வரவேற்க இந்த வெடிகளை வெடிப்பார்கள். அதனால் தான் இதற்கு மாப்பிள்ளை வெடி என்று பெயர், இது வெடிப்பதைப் பார்க்கும் போது நன்றாக இருக்கும்.
கோயில் திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகளுக்குத் தேவையான வெடிகளையும் தயார் செய்து தருகிறோம். இதில் அதர் வேட்டு என்ற வெடி சாமிக்காக உள்ள வெடி. மக்களுடைய விருப்பத்திற்கேற்ப சிவகாசியிலிருந்தும் சில வெடிகளை வாங்கி மெயின் ரோட்டில் கடை வைத்து விற்பனை செய்கின்றோம்.
என் தாத்தா காலத்தில் அவர் இந்த நாட்டு வெடிக்கடை வைப்பதற்கு சில சோதனைகளும் இருந்தது. அதாவது ஒரு புறாவை வெடியில் கட்டி வைத்து மேலே விட வேண்டும். அப்போது அந்த புறா சாகாமல் இருக்க வேண்டும். இந்த போட்டியை அப்போதைய திருவாவடுதுறை ஆதீனம் தான் நடத்தினார். இந்த போட்டியில் என் தாத்தா தான் வெற்றி பெற்றார். இதனை நான் சிறு வயதில் பார்த்து இருக்கிறேன். இந்த பகுதியில் என் தாத்தா தான் இந்த தொழிலை முதன் முதலில் தொடங்கினார்.
அந்தக்காலத்தில் நாட்டு வெடியின் பெயர்தான் வாண வெடி. வாணத்தில் ராக்கெட் போல் சென்று வெடிப்பதால் வாண வெடி என்று பெயர். இதனால் தான் வாண வெடி கடை என்று பெயர் வைத்துள்ளோம். இப்போது வானத்தின் மேலே கலர்புல்லாக வெடிப்பதற்கு வாண வெடி என மாற்றி விட்டார்கள்.
இந்த நாட்டு வெடிகள் தயாரிக்கும் இடத்தில் அரசாங்கம் சொன்னபடி எல்லா பாதுகாப்பும் செய்து இருக்கிறோம். ஆடி மாதத்தில் வெடி செய்ய ஆரம்பித்து விடுவோம். 5 வேலை ஆட்கள் வேலை செய்கிறார்கள்.
தயார் செய்யும் வெடிகள் மட்டுமில்லாமல் சிவகாசியிலிருந்தும் வெடிகள் வாங்கி கடையில் வைத்து விற்பனை செய்கிறோம். பல கஷ்டங்களைத் தாண்டி இந்த நாட்டு வெடிகளைத் தயார் செய்கிறோம். இதற்கு உள்ளூர் மக்கள் ஆதரவு தருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
Mayiladuthurai,Nagapattinam,Tamil Nadu
October 11, 2025 6:28 PM IST

