Last Updated:
மகபூபாபாத்தில் ராஜு உயிரோடு இருந்தபோது மருத்துவமனை ஊழியர்கள் சவக்கிடங்கில் தூக்கி போட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
தெலங்கானா மாநிலம் மகபூபாபாத்தில் உயிரோடு இருந்த நோயாளியை மருத்துவமனை சவக்கிடங்கில் தூக்கி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆதரவற்ற நபரான ராஜு என்பவர் தனக்கு ஏற்பட்ட கிட்னி பாதிப்பு பிரச்சனைக்கு தீர்வு காண மகபூபாபாத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருக்கு துணையாக யாரும் இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துவிட்டனர். சிகிச்சைக்காக அனுமதிக்காத சூழலில், இரண்டு நாட்கள் சாப்பாடு இல்லாமல் அங்கேயே காத்திருந்த அவர் மயக்கம் அடைந்திருக்கிறார்.
இந்த நிலையில், ராஜூ இறந்து விட்டதாக கருதிய மருத்துவமனை ஊழியர்கள், அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர் இறந்துவிட்டாரா, உயிருடன் இருக்கிறாரா என்று கூட வந்து பார்க்காத மருத்துவமனை அதிகாரிகள் அவரை தூக்கி மருத்துவமனை சவக்கிடங்கில் போட உத்தரவு பிறப்பித்தனர்.
இதையடுத்து, சவக்கிடங்கை சுத்தம் செய்த போது ராஜூவின் உடலில் அசைவுகள் இருப்பதை மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் பார்த்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் ராஜூவின் உடலில் அசைவு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவசர சிகிச்சை வார்டுக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜீவுக்கு இப்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
October 31, 2025 5:07 PM IST
உயிரோடு இருந்த நோயாளி.. சவக்கிடங்கில் தூக்கிப்போட்ட மருத்துவமனை.. தெலங்கானாவில் பகீர் சம்பவம்!


