Last Updated:
பிரதமர் மோடியை விட இந்திரா காந்தி அதிக மன வலிமை கொண்டவர் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், நாளந்தாவில் பரப்புரை செய்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திரா காந்தி யாரிடமும் அடிப்பணியவில்லை எனவும், ஆனால் நரேந்திர மோடி கோழை என்றும் கடுமையாக விமர்சித்தார்.
பிகார் மக்களின் கடின உழைப்பால் துபாய் நகரங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ராகுல் காந்தி, பிகார் இளைஞர்களுக்கு சொந்த மண்ணில் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். பிகார் இளைஞர்கள் பிற மாநிலங்களுக்கு வேலை தேடி அலைய வேண்டிய சூழல் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
நேற்று தர்பங்காவில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “மகாகத்பந்தனின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி. மகாகத்பந்தன் அரசாங்கம் அனைத்து சாதிக்கும், அனைத்து மதத்திற்குமான அரசாக இருக்கும். யமுனை நதி மிகவும் தூய்மையற்றதாக இருக்கிறது. அதை நீங்கள் குடித்தால், ஒன்று நோய் வரும் அல்லது மரணிக்க வேண்டியதும் வரும்.
யாரும் அதில் இறங்க முடியாத நிலையில் இருக்கிறது. ஆனால், மோடி அங்கு ஒரு குளத்தை உருவாக்கி, அதில் தூய்மையான நீரை பைப் மூலம் அங்கு கொண்டுவந்து அதில் நீராட இருக்கிறார்” என பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
October 30, 2025 7:46 PM IST


