Last Updated:
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போபே லிட்சிஃபீல்ட் 93 பந்துகளில் 3 சிக்சர் 17 பவுண்டரியுடன் 119 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி சுற்றில் இன்று இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் அரையிறுதி போட்டிகளுக்கு தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றன.
நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து 2ஆவது அரையிறுதி போட்டி இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் கேப்டன் அலிசா ஹீலி 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இணைந்த போபே லிட்சிஃபீல்ட் – எலிஸ் பெர்ரி இணை அற்புதமாக பேட்டிங் செய்து ஸ்கோரை உயர்த்தியது.
இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 155 ரன்கள் பார்ட்னஷிப் அமைத்தனர். பெர்ரி 77 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பெத் மூனி 24 ரன்களும், அன்னபெல் சதர்லேன்ட் 3 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போபே லிட்சிஃபீல்ட் 93 பந்துகளில் 3 சிக்சர் 17 பவுண்டரியுடன் 119 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஆஷ்லே கார்டனர் 63 ரன்கள் சேர்க்க அடுத்து வந்தவர்கள் ஓரளவு ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்தினர். 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் குவித்துள்ளது.
இதையடுத்து 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இந்திய அணியின் வீராங்கனைகள் களம் இறங்கியுள்ளனர்.
October 30, 2025 6:53 PM IST


