Last Updated:
இந்தி பேசும் வட மாநிலங்களில் பிகார் மட்டும் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத மாநிலமாக இருந்து வருகிறது. அது பற்றியும், அதன் பின்னணி பற்றியும் பார்க்கலாம்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பாஜகவுக்கு, பெரும்பான்மையான வாக்குகள் மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் அரியானா போன்ற இந்தி பேசும் மாநிலங்களில் இருந்தே கிடைக்கின்றன.
அந்த மாநிலங்களில் எல்லாம் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால், இந்தி பேசும் மாநிலங்களில் அரசியல் ரீதியிலான முக்கியத்துவம் பெற்ற பிகார் மட்டுமே பாஜகவுக்கு எட்டாக்கனியாக இருந்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு கூட்டணிகளை அமைத்து களம் கண்டும் தனித்து ஆட்சிக் கட்டிலில் பாஜக-வால் அமர முடியவில்லை.
கடந்த 2010-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து பிகாரில் களம் கண்டது பாஜக. அதில், அதிகபட்சமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி 115 தொகுதிகளில் வென்றது. கூட்டணிக் கட்சியான பாஜக 91 இடங்களில் வென்று சட்டப்பேரவையில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
2015-ஆம் ஆண்டு தேர்தலைப் பொறுத்தவரை, மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்ததைத் தொடர்ந்து பிகாரில் சற்று வலிமையாக காணப்பட்டது. அப்போது முதலமைச்சர் நிதிஷ் குமார், பாஜகவிடமிருந்து பிரிந்து, பரமவைரிகளான லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து வெற்றி கண்டார். அந்தத் தேர்தலில் 53 தொகுதிகளில் வென்று மூன்றாவது இடத்தையே பாஜக பிடிக்க முடிந்தது.
2020 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்த நிதிஷ்குமார், மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். ஆனால், ராம்விலாஸ் பஸ்வானின் மகன் தொடங்கிய கட்சியால் பல இடங்களில் தோற்று வெறும் 43 தொகுதிகளில் மட்டுமே நிதிஷின் கட்சி வென்றது. 75 இடங்களில் வென்ற ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு அடுத்தபடியாக 74 இடங்களுடன் 2ஆவது இடத்திற்கு முன்னேறியது பாஜக. நிதிஷ் ஆட்சியை பிடிக்க பாஜகதான் உதவியது.
எனினும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இந்தி மாநிலங்களைப் போல பிகாரிலும் தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற பாஜவின் வேட்கை நிறைவேறாத நிலையே நீடிக்கிறது. மண்டல் அரசியல் எனப்படும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான அரசியல் பிகாரில் வலுவாக வேரூன்றியிருப்பதே, முற்பட்ட வகுப்பினரின் கட்சியாக அறியப்படும் பாஜகவுக்கு பெரும் தடைக்கல்லாக இருந்து வருகிறது.
குறிப்பாக, 35 ஆண்டுகளாக பிகாரை ஆண்டு வரும் லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் இருவருடைய அரசியல் ஆசானான முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர், மண்டல் அரசியலின் முன்னோடியாக விளங்கியவர். இது இப்படியிருக்க அண்மையில் கர்ப்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது. அதுமட்டுமின்றி, பிகார் பரப்புரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, சமஸ்திப்பூரில் உள்ள கர்ப்பூரி தாக்கூரின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தத் தவறவில்லை.
கர்ப்பூரி தாக்கூரின் சீடர்களான லாலுவும், நித்திஷும் எதிரெதிர் துருவங்களாக பின்னாளில் மாறினாலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பாதுகாவலர்களாகவே காட்டிக் கொண்டனர். பிகாரில் அவர்கள் இருவரும் ஏற்படுத்திய தாக்கம் அளவிடமுடியாதது. அரசியலில் இருந்து கிட்டத்தட்ட லாலு பிரசாத் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், உடல் நிலை குன்றிய நிதிஷ் குமாரும் அரசியல் களத்தை விட்டு நீங்கினால் மட்டுமே பாஜகவின் பிகார் ஆட்சிக் கனவு கைகூட வாய்ப்புகள் உண்டு. ஆனால் இந்தத் தேர்தலிலும் 101 தொகுதிகளில் மட்டுமே பாஜக போட்டியிடுவதால் அனைத்திலும் வென்றாலும் 122 என்ற மாய எண் தொலைவாகவே தெரிகிறது. அதனால் பாஜக இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கத்தான் வேண்டும்.
October 29, 2025 7:22 PM IST
Bihar Election | இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவிற்கு எட்டாக்கனியாக இருக்கும் ஒரே மாநிலம்.. பிகார் அரசியல் அலசல்


