Last Updated:
இஎம்ஐ தொகையை செலுத்தாமல் தவறவிடும் பட்சத்தில், அந்த தொகை எங்கும் மறைந்துவிடாது. அது அடுத்த மாத தவணையில் சேர்கிறது.
ஒருவரது வாழ்க்கையில் எப்போது, எது நடக்கும் என யாராலும் சொல்ல முடியாது. சில நேரங்களில் அவசர மருத்துவ சிகிச்சைகளுக்கு நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். இல்லையென்றால் வருமானத்தை சரியாக திட்டமிடாத காரணத்தினால் அதிக பணம் செலவாகியிருக்கும். இதுபோன்ற காரணங்களால் நீங்கள் வாங்கிய வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ தொகையை செலுத்த முடியாமல் போகும் வாய்ப்புள்ளது. ஒரு மாதம் இஎம்ஐ செலுத்த தவறும்பட்சத்தில் உடனேயே உங்கள் வீட்டை வங்கிகள் ஜப்தி செய்யாது என்றாலும், பல வழிகளில் இது உங்களுக்கு சங்கடத்தைத் தரும் விஷயமாக மாறலாம்.
உங்களுக்கு வரும் முதல் சங்கடம், தாமதமாக செலுத்தியதற்கான அபராதம். நீங்கள் ஒரு சில நாட்கள் தாமதமாகச் செலுத்தினாலும் கூட, வங்கிகள் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை. இந்த அபராதத் தொகை சிறியதாகத் தோன்றினாலும், வேறு எதற்காவது பயன்படுத்தக்கூடிய தொகை இப்படி வீணாக செலவாகும். மேலும் வங்கிகள் உங்களின் கிரெடிட் ஸ்கோரில் கை வைப்பார்கள் என்பதையும் நியாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் செய்யக்கூடிய சிறிய தவறு இங்குதான் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நீங்கள் செலுத்தாமல் தவறவிட்ட இஎம்ஐ உடனடியாக கடன் நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்படும். ஒரு முறை தவறவிட்டாலும் கூட உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையக்கூடும். மேலும் மீண்டும் மீண்டும் தாமதமாக செலுத்தினால், அதிகமாக குறையும். பெரும்பாலும் வீட்டுக் கடன்கள் பெரிய தொகை என்பதோடு நீண்ட கால கடன்கள் என்பதால், கடன் வழங்குபவர்கள் எந்தவொரு தவணைத் தவறுதலையும் எச்சரிக்கையாகக் கருதுகிறார்கள். ஆகவே மற்றொரு கடனையோ அல்லது புதிய கிரெடிட் கார்டு வாங்குவதையோ இது கடினமாக்குகிறது.
இஎம்ஐ தொகையை செலுத்தாமல் தவறவிடும் பட்சத்தில், அந்த தொகை எங்கும் மறைந்துவிடாது. அது அடுத்த மாத தவணையில் சேர்கிறது. மேலும் அதற்கான வட்டியும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. காலப்போக்கில் இந்தக் கூடுதல் சுமை நீங்கள் திருப்பிச் செலுத்தும் அட்டவணையை அதிகமாக்கி, நீங்கள் கடன் வாங்கிய போது இருந்ததை விட அதிக விலை கொண்டதாக மாற்றும்.
வங்கிகள் பொறுமையை கடைபிடிக்கும். ஆனால் தொடர்ச்சியாக மூன்று இஎம்ஐ-களை செலுத்தாமல் இருந்தால், உங்கள் கடன் செயல்படாத சொத்தாக வகைப்படுத்தப்படலாம். அப்போதுதான் வீட்டை ஜப்தி செய்யக்கோரும் நோட்டீஸ் உங்கள் வீட்டுக்கு வரும். அதன்பிறகும் ஒழுங்காக செலுத்தவில்லை என்றால், நிலுவைத் தொகையை வசூலிக்க சொத்தை விற்க வங்கிக்கு உரிமை உண்டு.
நீங்கள் ஒரு முறை இஎம்ஐ செலுத்த தவறிவிட்டால் கடன் வழங்குபவர்கள் உங்களை எதுவும் செய்வதில்லை. இந்த மாதம் உங்களால் தாமதமாக தான் செலுத்த முடியும் என முன்பே தெரிந்தால், இந்த விவரங்களை வங்கிக்குத் தெரியப்படுத்துங்கள். இப்படி வெளிப்படையாக இருப்பது பெரும்பாலும் உங்களுக்கு உதவிகரமாகவே இருக்கும். மேலும் கடன் வழங்குபவருடனான உங்கள் உறவை இது மோசமாகாமல் தடுக்கிறது.
October 15, 2025 2:23 PM IST
வீட்டு கடனுக்கான மாதாந்திர தவணை தொகையை செலுத்த தவறினால் இதுதான் நடக்கும்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க!


