Last Updated:
அமெரிக்கா ஷாப்பிங் மாலில் இந்தியப் பெண் திருடும்போது பிடிபட்ட வீடியோ Police Release YouTube சேனலில் வைரல். நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
அமெரிக்காவில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் திருடும்போது கையும் களவுமாக பிடிபட்ட இந்தியப் பெண் ஒருவர், காவல்துறை விசாரணை அறையில் கதறி அழும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. “கடைகளில் தொடர்ந்து திருடியவர் இறுதியாக கையும் களவுமாக பிடிபட்டார்” என்ற தலைப்பில் போலீஸ் ரிலீஸ் என்ற பெயரிலுள்ள யூடியூப் சேனல் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது.
இந்த சம்பவம் ஜனவரி 15 அன்று நடந்திருந்தாலும், நான்கு நாட்களுக்கு முன்பு தான் இந்த வீடியோ இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. விசாரணை அறையில் கூப்பிய கைகளுடன் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணை, காவல்துறையினர் விசாரிக்கும் காட்சியுடன் இந்த வீடியோ தொடங்குகிறது. விசாரணை தொடங்குவதற்கு முன்பு அவர் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார். அடுத்த சில நிமிடங்களில் அவர் கண்ணீர் விட்டு அழுகிறார்.
என்ன மொழி பேசுவீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, அந்தப் பெண் “குஜராத்தி” என்று பதிலளித்தார். இதற்கு பதில் சொல்லும் போதே அவருடைய குரல் நடுங்கியது. “அது எங்கிருக்கிறது?” என்று ஒரு அதிகாரி கேட்க, “இந்தியா” என்று அந்தப் பெண் அழுது கொண்டே பதிலளிக்கிறார்.
பின்னர் அங்கிருந்த கடையின் ஊழியர் ஒருவர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அதிகாரிகளிடம் வழங்குகிறார். அதில் அந்தப் பெண் பணம் செலுத்தாமல் செக்அவுட்டைக் கடந்து பொருட்களை எடுத்துச் செல்வதை பார்க்க முடிகிறது. இதற்கிடையில் போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறவே, மருத்துவ உதவி தேவையா என்று போலீசார் மீண்டும் மீண்டும் அவரிடம் கேட்டனர்.
மறுவிற்பனை செய்யும் நோக்கத்துடன் கடையில் பொருட்களை திருடியதாக அந்தப் பெண் ஒப்புக்கொள்கிறாள். “தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள். நான் இனி ஒருபோதும் இப்படிச் செய்ய மாட்டேன்” என்று அழுது கொண்டே போலீசாரிடம் அவர் கெஞ்சுவதும் இந்த விடியோவில் உள்ளது.
இந்தப் பெண்ணை கைது செய்யுமளவிற்கு தவறு செய்திருந்தாலும், மீண்டும் இதேப்போல் தவறை செய்யாதே என எச்சரிந்து எந்த குற்றச்சாட்டுகள் இல்லாமல் விடுவிக்க போலீசார் முடிவு செய்தனர். மேலும் இனி ஒருபோதும் நீ இங்கு வர முடியாது என்றும் போலீசார் எச்சரித்தனர்.
இதற்கிடையில் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்தப் பெண்ணை கடுமையாக திட்டி பதிவிட்டனர். அந்தப் பெண் உடனடியாக சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
“ஒரு இந்தியனாக இந்தப் பெண்ணை பார்க்கும் போது எனக்கு எரிச்சல் தான் வருகிறது. அவ்வுளவு அழுதும் அந்தப் பெண்ணின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. இத்தகையவர்களை உடனடியாக நாடு கடத்த வேண்டும்” என்று ஆவேசத்துடன் ஒரு பயனர் கமெண்ட் செய்திருந்தார்.
“இந்த மக்கள் தங்கள் சுயநலத்திற்காக 1.4 பில்லியன் இந்தியர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறார்கள்” என்று மற்றொரு பயனர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஜூலை மாதம் இல்லினாய்ஸில் உள்ள ஒரு கடையில் இருந்து $1,300 (தோராயமாக ரூ.1.11 லட்சம்) மதிப்புள்ள பொருட்களை மற்றொரு இந்தியப் பெண் திருட முயன்றதாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
September 13, 2025 4:45 PM IST


