Last Updated:
அவரது உடலின் உள்பகுதியில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கேட்ச் பிடித்தபோது காயம் ஏற்பட்ட நிலையில், இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியின்போது மூன்றாவது மேட்சில் ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை அற்புதமாக ஸ்ரேயாஸ் ஐயர் கேட்ச் பிடித்தார்.
அப்போது விழுந்த அவருக்கு காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் அதன் பின்னர் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு இடது விலா எலும்புக்கூட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவரை 2 நாட்களாக ஐ.சி.யு.வில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவரது உடலின் உள்பகுதியில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த ஒரு வாரத்திற்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது நிலைமை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். தற்போது அவர் காயத்திலிருந்து முழுமையாக மீண்டு வருவதற்கு சில மாதங்கள் ஆகும் என்று கூறப்படுவதால், பஞ்சாப் அணிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
October 27, 2025 1:21 PM IST


