Last Updated:
நடிகைகள் தமன்னா, சமந்தா, ரகுல் பிரீத் சிங் ஆகிய மூவரும் ஒரே வீட்டில் தான் வசித்து வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் அப்படித்தான் அந்த வாக்காளர் பட்டியல் அங்கீகாரத்துடன் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் ஜூபிலி ஹில்ஸ் இடைத்தேர்தலையொட்டி, நடிகைகள் தமன்னா, சமந்தா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரின் புகைப்படங்களுடன் கூடிய போலி வாக்காளர் பட்டியல் ஒரே முகவரியில் பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகைகள் தமன்னா, சமந்தா, ரகுல் பிரீத் சிங் ஆகிய மூவரும் ஒரே வீட்டில் தான் வசித்து வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் அப்படித்தான் அந்த வாக்காளர் பட்டியல் அங்கீகாரத்துடன் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு இடைத் தேர்தலில் இந்த அளவுக்கு மோசடிகள் அரங்கேறுமா? என்று நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு மானாவாரியாக மோசடிகளை திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றன.
தேர்தல் ஆணைய கண்காணிப்பு, போலீஸ் கெடுபிடி என அத்தனை கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், இத்தனை சுதந்திரமாக போலி வாக்காளர்கள் பதிவு செய்யப்படுகிறார்கள் என்றால் எத்தனை நேர்மையாக தேர்தல் நடைபெறும் என்பதே வாக்காளர்களின் கேள்வியாக உள்ளது. ஒரே முகவரியில் நடிகைகளின் பெயரில் போலி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது எப்படி?
தெலங்கானா மாநிலம் ஜுப்ளி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பிஆர்எஸ் கட்சியின் மகந்தி கோபிநாத் கடந்த ஜூன் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வரும் நவம்பர் 11ம் தேதி ஜூப்லி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் நவம்பர் 14 ஆம் தேதி எண்ணப்படும். தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில், வி. நவீன் யாதவ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ்., மறைந்த எம்.எல்.ஏ.வின் மனைவி மகந்தி சுனிதாவை நிறுத்தியுள்ளது.
இந்த நிலையில் தான் போலி வாக்காளர் பட்டியல் தொடர்பான சர்ச்சைகள் கிளம்பின. ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் காங்கிரஸ் கட்சி ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்களை பதிவு செய்திருப்பதாக பிஆர்ஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தனர். ஒரு வீட்டில் மட்டும், 43 போலி வாக்காளர்கள் பதிவாகியிருப்பதாகவும், ஒவ்வொரு வீட்டிலும், 43 போலி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பகீர் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
இந்த குற்றச்சாட்டுகள் சூடுபிடித்த நிலையில் தான், ஒரே முகவரியில் நடிகைகள், தமன்னா, சமந்தா, ரகுல்பிரீத்சிங் ஆகியோர் பெயரில் போலி வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வாக்காளர் அட்டைகளின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. போலி வாக்காளர்களை பதிவு செய்வது என்ற முடிவுக்கு வந்த பின்.. நடிகைகள் என்ன? சாதாரண மக்கள் என்ன? ஏதோ ஒரு புகைப்படத்தைப் போட்டு அச்சடித்து கட்டுக் கட்டாக விநியோகிப்பது தற்போதைய சூழலில் ட்ரெண்டாகி விட்டது.
யார் கேட்கப் போகிறார்கள்? என்கிற தைரியத்தில் நிலவும் இதுபோன்ற மோசடி சம்பவங்களுக்கு ஒரு முடிவே கிடையாதா? என பலரும் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர். சிறிதும் மனசாட்சியின்றி நடிகைகள் பெயரில் போலி வாக்காளர் பதிவு பட்டியலை உலவ விட்டிருப்பது எப்படி நியாயமாகும் என எதிர்க்கட்சியினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஆர்எஸ் தெலங்கானா சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நிதிமன்றம், மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே வாக்காளர் பட்டியலை திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதால், எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தை சரிபார்க்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
October 16, 2025 7:51 PM IST
தமன்னா, சமந்தா, ரகுல் ப்ரீத் சிங் ஒரே வீட்டில் வசிக்கிறார்களா..? வாக்காளர் அட்டையால் வந்த புதிய சிக்கல்.. என்ன நடந்தது?


